ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட வேண்டியதுதான்... ஜோதிர் ஆதித்யா சிந்தியா
இதுகுறித்து டெல்லியில் அவர் பேசுகையில், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவித்து வி்ட்டால் நிச்சயம் பெரும் மாற்றம் ஏற்படும். அது பெரிய மாற்றத்தையும், திருப்புமுனையையும் ஏற்படுத்த உதவும். ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டு லோக்சபா தேர்தலை சந்தித்தால் அது நிச்சயம் காங்கிரஸுக்குப் பலன் தரும் என்றார் ஜோதிர் ஆதித்யா சிந்தியா.
அவர் மேலும் கூறுகையில், இதுதொடர்பாக நாம் அவசரமாக முடிவெடுத்தாக வேண்டும். ஒரு சில நாட்களில் இதைச் செய்தாக வேண்டும். நமக்கு லோக்சபா தேர்தலுக்கான அவகாசம் குறைவாகவே உள்ளது என்றார் சிந்தியா.
பாஜக ஏற்கனவே நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து படு வேகமாக பிரசாரத்திலும் குதித்து விட்டது. ஆனால் காங்கிரஸ் அப்படி அறிவிக்காது என்று அக்கட்சி ஏற்கனவே கூறியுள்ளது. ஆனால் அடுத்து ராகுல் காந்திதான் பிரதமராக வருவார் என்று காங்கிரஸார் தொடர்ந்து பேசி வருகின்றனர். இதனால் குழப்பமே காணப்படுகிறது.
இந்த நிலையில்தான் நான்கு மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று விட்டது. காங்கிரஸ் 3 மாநிலங்களில் பெரும் தோல்வியைத் தழுவியுள்ளது.
தற்போது ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ள சிந்தியாதான், மத்தியப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுக்காக தலைமை தாங்கி பிரசாரம் செய்தவர் ஆவார். ஆனால் அங்கு காங்கிரஸ் பெரும் தோல்வியையே சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.