சித்தப்பா சிவ்பால் யாதவுடன் அகிலேஷ் அக்கப்போர்... சமாஜ்வாடி கட்சி உடையும் என முலாயம்சிங் 'வார்னிங்'
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளும் சமாஜ்வாடி கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அமைச்சரவையின் மூத்த அமைச்சரும் அவரது சித்தப்பாவுமான சிவ்பால் யாதவ் ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டி வருகிறார். அதே நேரத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவோ, சிவ்பால் யாதவுக்கு நெருக்கடி கொடுத்தால் கட்சியே இரண்டாக உடைந்துவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இப்போதே வரிந்துகட்டிக் கொண்டு தேர்தல் பணிகளில் இறங்கிவிட்டன. அதே நேரத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
என்ன பிரச்சனை?
சிறையில் உள்ள நிழல் உலக தாதா முக்தார் அன்சாரியின் புதிய கட்சியை சமாஜ்வாடி கட்சியுடன் இணைக்க முயற்சிகளை மேற்கொண்டார் சிவ்பால் யாதவ். ஆனால் இதற்கு அகிலேஷ் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதான் பிரச்சனையின் தொடக்கம்.
ராஜினாமா மிரட்டல்
இதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் பலரும் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்; அமைச்சர்களும் அதிகாரிகளும் என்னுடைய பேச்சை கேட்பது இல்லை; இப்படியே நீடித்தால் நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என தொடர்ந்து மிரட்டி வருகிறார் சிவ்பால் யாதவ். ஆனால் அகிலேஷ் யாதவோ இது குறித்து கண்டுகொள்ளவில்லை.
முலாயம்சிங் எச்சரிக்கை
இந்த நிலையில் லக்னோவில் சமாஜ்வாடி கட்சியின் தலைமையகத்தில் நேற்று சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முலாயம்சிங், சிவ்பால் யாதவுக்கு எதிராக கட்சியில் சதி நடக்கிறது. சிவ்பால் யாதவ் கட்சியில் இருந்து விலகினால் அவருடன் நிறைய பேர் வெளியேறிவிடுவார்கள்... இதனால் கட்சியே இரண்டாக பிளவுபட்டு விடும் என எச்சரித்தார். முலாயம்சிங் இந்த எச்சரிக்கை விடுத்தபோது இறுகிய முகத்துடன் அகிலேஷ் யாதவும் அமர்ந்திருந்தார்.
சிவ்பால் யாதவ் மீண்டும் மிரட்டல்
முலாயம்சிங்கின் இந்த ஆதரவு பேச்சு சிவ்பால் யாதவுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. எடாவா என்ற இடத்தில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அவர், ஊழல் அமைச்சர்கள், அதிகாரிகள் பட்டியலை முதல்வரிடம் தரப் போகிறேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நிச்சயம் ராஜினாமா செய்வேன் என மீண்டும் மிரட்டியுள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.