சென்னையில் சீரியசாக சிபிஐ ரெய்டு நடத்தியபோது, ப.சிதம்பரம் என்ன செய்துகொண்டிருந்தார் தெரியுமா?
பெங்களூர்: சென்னையில் சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரம் வீட்டில் சோதனைகளை நடத்திக்கொண்டிருந்தபோது அவர் எங்கே, என்ன செய்துகொண்டிருந்தார் தெரியுமா?
அதற்கு விடை இதுதான். சென்னையில் ப.சிதம்பரத்தின் இல்லத்தில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டபோது, சிதம்பரம், பெங்களூரிலுள்ள, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராகி வாதிடுவதற்காக வந்திருந்தார்.
ஒருபக்கம் சிபிஐ சீரியசாக விசாரித்துக்கொண்டிருந்த நிலையில், தான் ஒப்புக்கொண்ட ஒரு வழக்கில் கருமமே கண்ணாக வாதிட்டுக்கொண்டிருந்தார் ப.சிதம்பரம். ரெய்டு அவரை பாதிக்கவில்லை என்பது அவரது உடல் மொழியிலிருந்து தெரியவந்தது.
அவர் உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தபோது, ரெய்டு பற்றி அவரது கருத்துக்களைப் பெற பல்வேறு ஊடகங்களின் நிருபர் குழு காத்திருந்தது. எனினும் அவர் பதிலளிக்க மறுத்துவிட்டு சிரித்தபடி, தொடர்ந்து நடந்து சென்றுவிட்டார்.
இருப்பினும், ரெய்டு பற்றி சிதம்பரம் பின்னர் சில ஊடகங்களுக்கு போன் மூலம் கருத்து தெரிவித்தார். தன்னை எதிர்த்து சதி நடப்பதாக அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். தன்னை அமைதிப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் அறிக்கையில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.