8 கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திய லலித் மோடி: ஆனால் ஒன்னு கூட அவர் பெயரில் இல்லை
டெல்லி: முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி வெளிநாட்டு வங்கிகளைச் சேர்ந்த 8 கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் ஒரு கார்டு கூட அவர் பெயரில் இல்லை.
ஐபிஎல் மோசடி புகாரில் சிக்கி நாட்டை விட்டு ஓடிய ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி லண்டன் தப்பியோடிய பிறகு அவரது இல்லத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் செல்போன் மற்றும் 8 கிரெடிட் கார்டு பயன்பாட்டு விவரங்களை கைப்பற்றினர். அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐபிஎல் குழுவுடன் தொடர்பில் இருந்த 2008ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை அந்த கார்டுகளை எதற்காக பயன்படுத்தினார் என்ற விவரங்களை வருமான வரித்துறை கேட்டிருந்தது.
2011ம் ஆண்டு ஜூலையில் வருமான வரித்துறை மோடிக்கு அளித்த நோட்டீஸ்படி 2 கார்டுகள் அவரது உறவினர் சுரேஷ் செல்லாராமின் மனைவி கவிதா பெயரில் உள்ளது. சுரேஷ் செல்லாரம் ஒரு காலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பெரும் பங்குகளுக்கு சொந்தக்காரராக இருந்தார். மேலும் 2 கிரெடிட் கார்டுகள் லலித் மோடியின் மாற்றான் மகள் கரிமாவின் பெயரில் உள்ளது. கரிமாவின் கணவர் கௌரவ் பர்மன் கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவர்.
வருமான வரித்துறை நோட்டீஸுக்கு அவர் அளித்த பதிலில், எந்த ஒரு கிரெடிட் கார்டும் தனது பெயரில் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் அந்த 8 கிரெடிட் கார்டுகள் யார் யார் பெயரில் உள்ளது என்ற விவரத்தை வெளியிட்டுள்ளார்.
கவிதா செல்லாராமின் பெயரில் இங்கிலாந்தைச் சேர்ந்த நேஷனல் வெஸ்ட்மின்ஸ்ட்ர வங்கி, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் சர்வீஸ் யூரோப் லிமிடெட் ஆகியவை வழங்கிய 3 கார்டுகள் உள்ளன. 2 கார்டுகள் கரிமாவின் பெயரில் உள்ளன. உறவினர்கள் ஆதித்யா செல்லாராம், அனிஷா செல்லாராம் மற்றும் விஜய் இஸ்ரானி ஆகியோர் பெயரில் தலா ஒரு கிரெடிட் கார்டுகள் உள்ளன.
அந்த கார்டுகளை பயன்படுத்தி நண்பர்களுக்கு விமான பயண டிக்கெட் எடுக்கப்பட்டது, கார்டு உரிமையாளர்களுக்கு ஹோட்டலில் அறை முன்பதிவு செய்யப்பட்டது என்று மோடி தெரிவித்துள்ளார். வேறு எந்த விவரத்தையும் அவர் வெளியிடவில்லை.