நான் உயிருடன் இருக்கும் வரை இங்கு குடியுரிமை சட்டம் அமலாகாது.. மம்தா பானர்ஜி ஆவேசம்
கொல்கத்தா: நான் உயிருடன் இருக்கும் வரை மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம் செயல்படுத்தப்படாது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து கடும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நைஹாட்டியில் ஒரு கண்காட்சியைத் திறந்து வைத்தபோது, பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, "நான் உயிருடன் இருக்கும் வரை, குடியுரிமை திருத்த சட்டம் மேற்கு வங்கத்தில் செயல்படுத்தப்படாது.
போலீஸை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டியை தூக்கிகொண்டு ஓடிய மர்ம நபர்கள்.. புதுக்கோட்டையில் பரபரப்பு
தடுப்பு முகாம்
அவர்கள் தடுப்பு முகாம்களை அமைப்பதாக கூறுகிறார்கள். யார் ஆட்சியில் உள்ளனர்? நாங்கள். என் உயிரைக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். நான் இறந்தாலும் தடுப்பு முகாம்களை அமைக்க பாஜகவை அனுமதிக்க மாட்டேன்.
தடுப்பு முகாம் அமைப்பு
பாஜக அஸ்ஸாம் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கின்ற காரணத்தால் அந்த மாநிலத்தில் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மத்தியில் பாஜக அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமாக இருப்பதை போல், திரிணாமுல் காங்கிரஸ் அரசும் மேற்கு வங்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. எனவே மத்தியில் (டெல்லி) உங்களுக்கு உரிமை இருக்கிறது என்றால் எங்களுக்கு இங்கே உரிமை உள்ளது.
விண்ணப்பிக்கணும்
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவது இந்தியர்களை வெளிநாட்டினராக மாற்றும். வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்ட பின்னர், நாட்டின் குடிமக்கள் ஆக இந்தியர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
நிதி திரட்டி உள்ளது
அட்டைகளை (என்ன அட்டை என மம்தா விளக்கவில்லை) வழங்க பல இடங்களில் நிதி திரட்டி இருக்கிறாரகள். அவர்கள் பாஜகவினர் என்று தெரியும். குடியுரிமை திருத்த சட்டத்துககு எதிராக போராடும் மாணவர்களை பாஜக பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேற்றுகிறது. அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை பாஜக அரசு எடுத்து வருகிறது.
என்பிஆர்
பாஜகவின் நோக்கத்தை உணர்ந்த பின்னர் தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்தில் இருந்து மேற்கு வங்க அரசு விலகி விட்டது. இது நாட்டின் குடிமக்களை தனிமைப்படுத்தும் என்பதால் அதற்கான பயிற்சியில் இருந்து விலகி விட்டோம். மக்கள்தொகை பதிவிற்கும் தேசிய குடிமக்கள் பதிவிற்கும் தொடர்பு உள்ளது.
நிச்சயம் வெற்றி
யாரும் மேற்கு வங்காளத்தை விட்டோ அல்லது நாட்டை விட்டோ வெளியே வேண்டிய நிலை ஏற்படாது. இப்போது நடந்து வரும் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். எனவே நாட்டு மக்கள் யாரும் பயப்படவோ கவலைப்படவோ தேவையில்லை" இவ்வாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.