கர்நாடகா அரசின் சீராய்வு மனு தள்ளுபடி.. ஜெ.வின் 10,500 சேலைகள், 750 ஜோடி செருப்புகள் என்னவாகும்?
பெங்களூர்: வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு விதிக்கப்பட்ட ரூ. 100 கோடி அபராதத்தை எப்படி வசூலிப்பது என்பது பற்றி உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 10,500 சேலைகள், 750 ஜோடி செருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் கர்நாடக நீதிமன்றத்தில் முடங்கி கிடக்கின்றன.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், ஜெயலலிதா இறந்துவிட்ட காரணத்தால் அவரை வழக்கிலிருந்து விடுவித்தது. ஆனால், ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 100 கோடி ரூபாய் அபராதத் தொகையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
அதே நேரத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும், சிறப்பு நீதிமன்றம் நான்காண்டு சிறை தண்டனை அளித்து பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட தலா ரூ10 கோடி அபராதத்தையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
இந்த சூழ்நிலையில், ஜெயலலிதாவை குற்றவாளி என அறிவிக்க கோரியும், அபராதத்தை எப்படி வசூலிப்பது என்பதை தெரிவிக்க கோரியும் கர்நாடக மாநில அரசு சார்பில், உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 10,500 சேலைகள், 750 ஜோடி செருப்பு, 500 வொயின் கிளாஸ், 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ ஒரு கோடி மதிப்புள்ள வைர நகைகள் உள்ளிட்ட பொருட்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி ஒப்படைக்கப்பட்டால் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் நினைவு பொருட்களாக வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா, பையனூர் பங்களா உள்ளிட்ட சொத்துக்களும் ஜெயலலிதாவுக்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.