சிறுமி பலாத்கார வழக்கு: சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபுவிற்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபுவிற்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
டெல்லி: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக சிறையில் இருந்து வரும் சாமியார் ஆசாராம் பாபுவிற்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 76 வயதான சாமியார் ஆசாராம் பாபு கடந்த 2013 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் அவரது ஜாமீன் மனு பலமுறை நிராகரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ஆசாராம் பாபு. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்துவிட்டது.
அதேபோல், ஆசாராம் பாபு தாக்கல் செய்த வழக்கமான ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது. முக்கிய சாட்சிகள் மீது நடத்தப்படும் தாக்குதல் வழக்கை தாமதப்படுத்த நடக்கும் முயற்சிகள் ஆகியவற்றை குறிப்பிட்டு உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
அவரது ஜாமீனுக்காக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, சல்மான் குர்ஷித் என பலரும் போராடிப் பார்த்தனர். ஆனாலும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்தநிலையில் உச்சநீதிமன்றமும் ஆசாராம் பாபுவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.