தொடரும் பயங்கரம்.. பலாத்கார சாமியார் ஆசாரம் பாபுவுக்கு எதிரான சாட்சி மீது துப்பாக்கிச் சூடு!
ஷஜான்பூர்: பலாத்கார வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சர்ச்சை சாமியார் ஆசாரம் பாபுவுக்கு எதிரான மற்றொரு சாட்சி மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 75 வயதான சாமியார் ஆசாராம் பாபு கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் ஆசாராம் பாபு மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1000-க்கும் மேற்பட்ட பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையில் 121 ஆவணங்களும் 58 சாட்சிகளின் வாக்குமூலங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த சாட்சிகள் மீது தொடர்ச்சியாக ஆசாராம் பாபு அடியாட்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே 8 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் கிர்பால்சிங் என்ற மற்றொரு சாட்சி மீது நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் ஷஜான்பூர் மாவட்டத்தில் உள்ள தனது இல்லத்திற்கு நேற்று இரவு சென்று கொண்டிருந்த கிர்பால் சிங் மீது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பேரலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆசாராம் பாபு மீது பாலியல் புகார் சுமத்தியுள்ள பெண்ணின் தந்தையின் போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் கிர்பால் சிங். கடந்த சில நாட்களாக ஆசாராம் பாபுவின் ஆதரவாளர்கள் தன்னை மிரட்டுவதாக கூடுதல் நகர் மாஜிஸ்திரேட்டிடம் அவர் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில்தான் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் சமையல்காரராக பணியாற்றிய மற்றொரு முக்கிய சாட்சி ஒருவர் முசாபர்நகரில் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.