வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை ஸ்ரீரங்கத்தில் நிறுத்த கோரிக்கை: ரயில்வே அமைச்சரை சந்தித்த ஆசிர்வாதம் ஆச்சாரி
டெல்லி: வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை ஸ்ரீரங்கத்தில் தினசரி நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சரிடம் பாஜக பிரமுகர் ஆசிர்வாதம் ஆச்சாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீரங்கம் மிகப்பெரிய புனித ஸ்தலம். ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பெரும்பாலும் ஸ்ரீரங்கம் வந்து செல்ல பக்தர்கள், பொதுமக்கள் ரயிலை பயன்படுத்துகின்றனர். எனவே ஸ்ரீரங்கம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.
பகல் நேரத்தில் சென்னையில் இருந்து செல்லும் குருவாயூர் ரயில் நின்று செல்கிறது. ஆனால் சென்னை- மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும் நின்று செல்வதில்லை. விழாக்காலங்களில் மட்டுமே வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்கிறது.
இதனால் சென்னையில் இருந்தும், மதுரையில் இருந்தும் பகல் நேரங்களில் ஸ்ரீரங்கம் வரும் பக்தர்கள், பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே வைகை எக்ஸ்பிரஸ் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்ல வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரயில் பயணிகளுக்கான வசதியை ஆய்வு செய்வதற்கான குழு உறுப்பினராக அண்மையில் நியமிக்கப்பட்ட பாஜக பிரமுகர் ஆசிர்வாதம் ஆச்சாரி இன்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் தினசரி நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஆசிர்வாதம் ஆச்சாரி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிடம் உதவியாளராக இருந்தவர். திருச்சியை சேர்ந்த இவர் மத்திய அரசு பணியில் பல ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்தார். தகவல் தொடர்பு அமைச்சராக ஆ.ராசா இருந்த போது அவருக்கு சீனியர் பி.ஏ.வாகவும் பணியாற்றினார்.
பின்பு மத்திய ரயில்வே அமைச்சகத்தில் பணியாற்றினார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலின் போது, சுப்பிரமணியசாமி வழிகாட்டுதலில் பா.ஜ.க.வின் அரசியல் வியூகம் வகுக்கும் குழு உறுப்பினராக பணியாற்றினார்.
இவர் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் ஆ.ராசா மற்றும் கனிமொழிக்கு ஆகியோருக்கு எதிரான முக்கிய அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் ரயில் பயணிகளுக்கான வசதியை ஆய்வு செய்வதற்கான குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் இந்த ஆசிர்வாதம் ஆச்சாரி.