நீதிபதி கங்குலி மீது நடவடிக்கை கோரி பிரதமருக்கு கூடுதல் சொலிசிடர் ஜெனரல் கடிதம்
டெல்லி: பாலியல் புகாரில் சிக்கியிருக்கும் நீதிபதி ஏ.கே. கங்குலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கூடுதல் சொலிசிடர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் கடிதம் அனுப்பியுள்ளார்.
சட்ட பயிற்சி மாணவி ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ஒருவரிடம் தான் பயிற்சி பெற்ற போது, அவர் பாலியல் ரீதியாக தன்னை தொல்லைப்படுத்தினார் என்றா பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டார். இதுபற்றி 3 நீதிபதிகளை கொண்ட குழு விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்தது.
ஏ.கே.கங்குலிதான் அந்த நீதிபதி என்றும் அந்த மாணவி கூறிய புகாருக்கு முகாந்திரம் உள்ளது என்றாலும் அவர் ஓய்வு பெற்றுவிட்டதால் அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க விரும்பவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியது.
நீதிபதி ஏ.கே.கங்குலி மேற்கு வங்காள மாநில மனித உரிமை ஆணையராக பதவி வகித்து வருகிறார். பாலியல் புகாரை அடுத்து அவர் மனித உரிமை ஆணையர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
தற்போது இதுதொடர்பாக மத்திய கூடுதல் சொலிசிடர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மாநில மனித உரிமை ஆணையராக உள்ள ஏ.கே. கங்குலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.