பெண்களை இழிவுபடுத்தும் ஈனப் பிறவிகள் தப்பவே கூடாது.. ஆஷா சரத் ஆவேசம்
கொச்சி: தனது முகத்தை வேறு ஒரு ஆபாச பெண்ணுடன் இணைத்து வெளியான வீடியோ விவகாரத்தில் தனக்கு ஆதரவாக உள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக நடிகை ஆஷா சரத் கூறியுள்ளார்.
மலையாள நடிகையான ஆஷா சரத், அங்கு வெளியான திரிஷ்யம் படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர். அதேபோல பாபநாசம் படத்தில் நடித்து தமிழக ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாகி விட்டார். கூடவே தற்போது கமல்ஹாசனுடன் தூங்காவனம் படத்தில் ஜோடியாகவும் நடிக்கிறார்.
இந்த நிலையில் வழக்கமாக நடிகைகள் சந்திக்கும் அநாகரீகமான சங்கடத்தை இவரும் சந்திக்க நேர்ந்துள்ளது. இவரது ஆபாசப் படம் என்று கூறி இணையதளத்தில் ஒரு வீடியோ உலா வருகிறது. இதையடுத்து கொச்சி போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்துப் புகார் கொடுத்துள்ளார் ஆஷா.
தற்போது இந்த விவகாரத்தில் தனக்கு ஆதரவாக இருப்போருக்கு நன்றி தெரிவித்துள்ளார் தனது பேஸ்புக்கில். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அனைவருக்கும் நன்றி
இந்த நெருக்கடியான நேரத்தில் எனக்கு ஆதரவாக இருப்போருக்கும், என் மீது அக்கறை காட்டுவோருக்கும் நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன். எனது இதயத்தின் அடி ஆழத்திலிருந்து நன்றி தெரிவிக்கிறேன்.
சமூக விரோதிகள்
சில சமூக விரோதிகள் என்னுடையா படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் போட்டிருப்பதைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். இதுபோன்ற செயலில் ஈடுபட்டு பெண்ணின் ஒழுக்கத்திற்கு களங்கம் விளைவிப்போரை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்த உறுதி பூண்டுள்ளேன்.
போலீஸில் புகார்
இதன் காரணமாகவே நான் கொச்சி போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்துப் புகார் கொடுத்தேன். அதிகாரிகள் எனது புகார் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தீவிர விசாரணை நடக்கிறது
எனது புகார் மீது தீவிர விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். விரைவில் குற்றவாளியைக் கண்டுபிடிப்போம் என்றும் தெரிவித்துள்ளனர். இது நம்பிக்கை தருகிறது.
தண்டிக்கப்பட வேண்டும்
பெண்களுக்கு எதிரான இத்தகையக ஈனமான செயலில் ஈடுபடும் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் தண்டிக்கப்படாமல் தப்பி விடக் கூடாது. எனவே இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக போராட உறுதி பூண்டுள்ளேன்.
அனைவரும் ஒருங்கிணைவோம்
பெண்கள் மதிக்கப்பட வேண்டும், அவமானப்படுத்தக் கூடாது, இழிவுபடுத்தக் கூடாது. இந்த நோக்கத்தில் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்று கூறியுள்ளார் ஆஷா.