காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த வீரர் மோகன் நாத் கோஸ்வாமிக்கு அசோக் சக்ரா விருது
டெல்லி: இந்தியாவின் 67வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் மோகன் நாத் கோஸ்வாமிக்கு வீரதீரச் செயலுக்கான உயரிய விருதான அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது.
நாட்டின் 67 வது குடியரசு தின விழா இன்று தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி அன்சாரி ஆகியோர் முன்னிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அசோக் சக்ரா விருது:
இவ்விழாவில் ராணுவத்தில் வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. போரில் வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர் மோகன் நாத் கோஸ்வாமிக்கு அசோக் சக்ரா விருதினை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
இன்னுயிர் ஈந்த வீரர்:
ராணுவத்தின் சிறப்பு பிரிவில் பணியாற்றிய கோஸ்வாமி, காஷ்மீரில் கடந்த ஆண்டு தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையின்போது தன் உயிரைத் தியாகம் செய்து, சக வீரர்கள் இருவரை போராடி காப்பாற்றினார். அவருக்கான இந்த உயரிய விருதை அவரது மனைவி பெற்றுக்கொண்டார். வீரர்கள் மறைவுக்குப் பின் வழங்கப்படும் மிக உயரிய விருது இதுவாகும்.
கீர்த்தி சக்ரா விருது:
மேலும், ராணுவ வீரர்கள் மகேந்திர சிங், ஜெகதீஷ் சந்த் ஆகியோருக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது. அதன்பின்னர், விழாவின் முக்கிய அம்சமான முப்படைகளின் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பை விழா மேடையில் அமர்ந்திருந்த தலைவர்கள் பார்வையிட்டனர்.