மெர்சல் திரைப்படத்தில் காட்சிகளை நீக்க கோருவது அநீதியானது: ராஜஸ்தான் மாஜி முதல்வர் அசோக் கெலாட்
மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி காட்சிகளை நீக்க கோருவது அநீதியானது ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் சாடியுள்ளார்.
டெல்லி: விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்தில் ஜி.எஸ்.டி.க்கு எதிரான காட்சிகளை நீக்கக் கோருவது அநீதியானது என ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலருமான அசோக் கெலாட் சாடியுள்ளார்.
மெர்சல் திரைப்படத்துக்கு பாஜக தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் பதிலடி தருகின்றனர்.
இதனால் மெர்சல் திரைப்பட விவகாரம் தேசிய அளவிலான பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா பற்றி மெர்சல் திரைப்படத்தில் கருத்துகளை முன்வைக்க விஜய்க்கு உரிமை உண்டு. பேச்சு சுதந்திரத்துக்கு பாஜக புதிய வரையறையை கொடுக்கிறது. எது சரி.. எது தவறு என்பதை பாஜக தீர்மானிக்க முயற்சிக்கிறது என சாடியுள்ளார்.
BJP demanding cuts to Tamil film, #Mersal just bcs a character points at high #GST is totally unjustified n inappropriate.#TamiliansVsModi
— Ashok Gehlot (@ashokgehlot51) October 21, 2017
இதேபோல் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டிக்கு எதிரான காட்சிகளை நீக்கச் சொல்வது அநீதியானது என சாடியுள்ளார்.