ராஜஸ்தான் முதல்வர் யார்?.. நாளை பெயரை அறிவிக்கிறார் ராகுல் காந்தி
Recommended Video
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முதல்வராக யாரை தேர்வு செய்வது என்பதில் மேலும் ஒரு நாள் சஸ்பென்ஸ் கூடியுள்ளது. நாளைதான் முதல்வர் பெயரை ராகுல் காந்தி அறிவிப்பார் என தகவல்கள் கூறுகின்றன.
அசோக் கெலாட் தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்ட நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 70 சதவீதம் பேர் சச்சின் பைலட்டுதான் முதல்வராக வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜஸ்தானில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவோ வெறும் 73 தொகுதிகளையும், சுயேச்சைகள் 13 இடங்களிலும் மற்ற கட்சிகள் 14 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில் ராஜஸ்தான் முதல்வர் யார் என்பதை தேர்வு செய்யும் அடுத்த கட்ட சவால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்பு வந்துள்ளது. அனுபவம் வாய்ந்த அசோக் கெலாட் மற்றும் இளம் தலைவர் சச்சின் பைலட் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.
இதில் சச்சின் பைலட் ஜாட் வகுப்பைச் சேர்ந்தவர். இவர்கள்தான் ராஜஸ்தானில் பெரும்பான்மை சமூகம் ஆவர். மலி என்ற சமூகத்தைச் சேர்ந்தவர் கெலாட். ஜாட் வகுப்பினரை ஐஸ் வைத்தால்தான் லோக்சபா தேர்தலில் காங்கிரஸுக்கு சாதகமாக அமையும். எனவே பைலட்டையே ராகுல் தேர்வு செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
சச்சின் பைலட் முதல்வராக காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பெருமளவில் ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்று நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பைலட்டுக்கே ஆதரவு அதிகம் காணப்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தியிடம் முடிவு விடப்பட்டுள்ளது. அவர் நாளை அறிவிப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.