சட்டசபையை உடனே கூட்டுங்க.. ராஜஸ்தான் ஆளுநளிரிடம் கெலாட் வலியுறுத்தல் - காங்.எம்.எல்.ஏக்கள் முழக்கம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபையை உடனே கூட்ட வேண்டும் என்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் முதல்வர் அசோக் கெலாட் நேரில் வலியுறுத்தினார். அப்போது சட்டசபையை உடனே கூட்ட வலியுறுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முழக்கம் எழுப்பினர்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட், 18 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இவர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் ஜோஷி மேற்கொண்ட நடவடிக்கை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ராஜஸ்தான் அரசியல்: சச்சின் பைலட் உள்ளிட்ட எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ஹைகோர்ட் தடை
முதல்வர் கெலாட் கோரிக்கை
இந்த உத்தரவு இறுதியானது அல்ல- உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் சட்டசபையை உடனே ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா கூட்ட வேண்டும் என்று முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தி வருகிறார். ஆனால் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா இதற்கு பிடிகொடுக்கவில்லை.
ஆளுநருக்கு கெலாட் வார்னிங்
இதனால் அதிருப்தி அடைந்துள்ள முதல்வர் கெலாட், கொரோனா உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டியுள்ளது. இதற்காக சட்டசபையை முறைப்படி ஆளுநர் கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறோம் . ஆனால் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவோ காலம் தாழ்த்தி வருகிறார். ஆளுநரின் இந்த போக்கு நீடித்தால் பொதுமக்கள் ராஜ்பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாஜகதான் காரணம்
மேலும் தங்களது கட்சி எம்.எல்.ஏக்களை பாஜக ஆளும் கட்சி ஹரியானாவில் கடத்தி வைத்திருக்கிறார்கள். இது ஜனநாயக விரோத செயல். எங்கள் எம்.எல்.ஏக்களை சட்டசபை கூட்டத் தொடரில் கலந்து கொள்ள முடியாத நிலையை உருவாக்கி உள்ளது பாஜக என்றும் கெலாட் குற்றம்சாட்டினார்.
கெலாட்டுக்கு கண்டனம்
ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ, கெலாட்டின் எச்சரிக்கையை வன்மையாக கண்டித்துள்ளது. ஒரு மாநில முதல்வரே ஆளுநர் மாளிகையை முற்றுகையிட மக்களை தூண்டிவிடுவது சட்டவிரோதமாகும். எதற்காக சட்டசபையை உடனே கூட்ட வேண்டும் என கெலாட் துடிக்கிறார் என தெரியவில்லை எனவும் பாஜக கூறியுள்ளது.
ஆளுநருடன் கெலாட் சந்திப்பு
இதனிடையே ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை முதல்வர் அசோக் கெலாட் சந்தித்து பேசினார். அப்போது சட்டசபையை உடனே கூட்ட வேண்டும் என்று கெலாட் வலியுறுத்தினார். அப்போது சட்டசபையை கூட்ட வலியுறுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முழக்கம் எழுப்பினர்.