பாதி இங்கே.. பாதி அங்கே.. ராஜஸ்தானில் அடுத்தடுத்து நடக்கும் திக் திக் மாற்றங்கள்.. ஆட்சி கவிழுமா?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்து நடக்கும் திக் திக் மாற்றங்கள் காரணமாக அங்கு முதல்வர் அசோக் கெலாட் ஆட்சியை தக்க வைப்பாரா என்று கேள்விகள் எழுந்துள்ளது.
ராஜஸ்தானில் தற்போது பெரிய அளவில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. அங்கு காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக துணை முதல்வர் சச்சின் பைலட் களமிறங்கி இருக்கிறார்.
தனது எம்எல்ஏக்கள் மற்றும் ஆதரவாளர்கள் உடன் சச்சின் பைலட் தற்போது டெல்லியில் முகாமிட்டு இருக்கிறார். இன்னொரு பக்கம் முதல்வர் அசோக் கெலாட் ராஜஸ்தான் வெளியே நெடுஞ்சாலையில் இருந்து தனியார் ஹோட்டல் ஒன்றில் தனது ஆதரவாளர்கள் உடனே இருக்கிறார்.
நம்ம ஆளுங்க செஞ்சததான் காங்கிரஸ்காரங்களும் ஜெய்ப்பூர்ல செய்றாங்க...
நேற்று நிலவரம்
இந்த பிரச்சனையில் நேற்றைய நிலவரத்தின்படி முதல்வர் அசோக் கெலாட் தரப்பிற்கு 107 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர். அதாவது முதலில் 97 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்து வந்தனர். அதன்பின் அது 102 ஆக உயர்ந்தது. பின் மாலையில் 107 எம்எல்ஏக்கள் ஆதரவு தருவதற்காக கூறப்பட்டது. இதற்கான ஆதரவு கடிதம் தங்களிடம் இருப்பதாகவும் அசோக் கெலாட் தரப்பு கூறியது.
சச்சின் பைலட் தரப்பு
இன்னொரு பக்கம் சச்சின் பைலட் தரப்பிற்கு 12-16 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு தருகிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் இதுவும் கூட உறுதியில்லை. சச்சின் பைலட்டிற்கு பெரிய ஆதரவு இல்லை. அவர் எப்போது வேண்டுமானாலும் தனித்து விடபட வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டது. அதோடு சச்சின் பைலட் ஆதரவாளர்கள் சிலரும் கூட அசோக் கெலாட் பக்கம் வர வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது .
என்ன திருப்பம்
ஆனால் அதிரடி திருப்பமாக, அசோக் கெலாட்டிற்கு திடீரென ஆதரவு குறைந்துள்ளது. நேற்று அவருக்கு 107 எம்எல்ஏக்கள் ஆதரவு அழைத்து வந்தனர். சரியாக சொல்ல வேண்டும் என்றால் 12 எம்எல்ஏக்கள் மட்டுமே அவருக்கு ஆதரவு அளிக்கவில்லை. ஆனால் இன்று 18 எம்எல் ஏக்கள் காங்கிரஸ் மீட்டிங் வராமல் தவிர்த்து இருக்கிறார்கள். இன்று மொத்தம் 101 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு அளித்து உள்ளனர்.
ஆட்சி கவிழுமா
இந்த திருப்பத்தை அசோக் கெலாட் கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை. சரியாக தற்போது பெரும்பான்மைக்கு தேவையான 101 எம்எல்ஏக்கள் மட்டுமே அசோக் கெலாட்டிற்கு ஆதரவு அளிக்கிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் அசோக் கெலாட் ஆட்சிக்கு ஆதரவாக சிபிஐ கட்சிக்கு 2, ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு 1, பாரதிய டிரைபல் கட்சிக்கு 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். மொத்தமாக அசோக் கெலட் தரப்புக்கு 106 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
என்ன சந்தேகம்
ஆனால் இந்த கூட்டணி கட்சிகள் கண்டிப்பாக அசோக் கெலாட் தரப்பிற்கு ஆதரவு கொடுக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது . அவர்களின் நிலைப்பாடு என்ன என்பது இன்னும் முழுமையாக தெரியவில்லை. இதனால் அசோக் கெலாட் ஆட்சி தற்போது நூலிழையில் தொங்கி கொண்டு இருக்கிறது. உண்மையான முடிவு என்ன என்பது போக போகத்தான் தெரியும்.