முன்னாள் தடகள வீராங்கனை அஸ்வினி நாச்சப்பாவின் டெபிட் கார்டுகளை திருடி ரூ.2.7 லட்சம் எடுத்த நபர்
பெங்களூர் ஜெயநகரில் உள்ள மைதானத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தடகள வீராங்கனையான அஸ்வினி நாச்சப்பா கலந்து கொண்டார். அவர் தனது கைப்பையை மேடையில் உள்ள நாற்காலியில் வைத்து விட்டு கொடியேற்ற சென்றுள்ளார்.
அப்போது டிப்டாப்பாக உடை அணிந்த ஒருவர் மேடைக்கு வந்து அஸ்வினியின் கைப்பையில் இருந்த பர்ஸை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். அந்த பர்ஸில் டெபிட் கார்டுகள் இருந்துள்ளன. அந்த நபர் கார்டுகளை திருடிய அரை மணிநேரத்தில் ஜெயநகரில் உள்ள பல்வேறு ஏடிஎம் மையங்களில் ரூ.2.7 லட்சம் பணத்தை எடுத்துள்ளார்.
அந்த நபர் பணம் எடுத்தபோது அஸ்வினியின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் வந்துள்ளது.
இது குறித்து அஸ்வினியின் கணவர் தத்தா கரும்பையா கூறுகையில்,
அந்த நபர் அஸ்வினியின் இரண்டு வங்கிகளின் டெபிட் கார்டுகளை திருடி அதன் மூலம் ரூ.2.7 லட்சம் பணத்தை எடுத்துள்ளார். அந்த நபர் ஜெயநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வெவ்வேறு வங்கிகளின் 20 ஏ.டி.எம். மையங்களில் பணத்தை எடுத்துள்ளார். ஒவ்வொரு முறையும் ரூ.10,000 பணத்தை எடுத்துள்ளார் என்றார்.
இந்த சம்பவம் பற்றி அஸ்வினி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.