"கீழடி" அமர்நாத் விவகாரத்தில் தொடர்ந்து அரசியல் செய்யும் மத்திய அரசு..அமெரிக்கா செல்ல அனுமதி மறுப்பு
கீழடி தொல்லியலாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணா, அமெரிக்கா செல்ல இந்திய தொல்லியல் துறை அனுமதி மறுத்துவிட்டது.
Recommended Video
குவாஹாட்டி: கீழடி தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா அமெரிக்காவில் நடைபெறும் தமிழ் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்திய தொல்லியல் துறை அனுமதி மறுத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி பள்ளிச்சந்தை புதூரில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அகழ்வாய்வு பணி நடைபெற்று வந்தது. மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் இப்பணி நடைபெற்று வந்தன.
இடமாற்றம்
110 ஏக்கர் பரப்பளவு உள்ள தொல்லியல் மேட்டில் ஒரு ஏக்கர் பரப்பளவில் மட்டும் 102 அகழ்வாய்வுக் குழிகளில் சுமார் 5300 தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. இதுவரை இரண்டு கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமர்நாத் ராமகிருஷ்ணா திடீரென அஸ்ஸாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
எதிர்ப்பு
அகழாய்வு பணிகளுக்கு நிதி ஒதுக்கக் கோரியதாலேயே அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு தமிழக அரசியல் கட்சியினரும் தமிழ் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் தற்போது அமர்நாத் கவுகாத்தியில் பணியாற்றி வருகிறார்.
அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு அழைப்பு
அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு நிகழ்ச்சி வரும் 29-ஆம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. உலகம் முழுவதும் 5000 பேர் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
மத்திய அரசு அனுமதி மறுப்பு
அமெரிக்கா செல்ல அனுமதி கோரி அமர்நாத் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் தொல்லியல் துறை இயக்குநர் தாரா சந்தர் கடந்த மாதம் 25 ஆம்தேதி கவுகாத்தி மண்டல கண்காணிப்பாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், அமர்நாத் அமெரிக்கா செல்வதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.