போலீஸ் அதிகாரிகளை பொறுப்போடு நடக்க சொல்லுங்கள்.. சிந்தனையாளர்கள் கைது வழக்கில் சீறிய சுப்ரீம்கோர்ட்
டெல்லி: இடதுசாரி செயற்பாட்டாளர்கள் வழக்கில் மகாராஷ்டிரா காவல் துறை நடந்து கொண்ட விதம் சுப்ரீம் கோர்ட்டை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
மகாராஷ்டிரா போலீசார் கடந்த மாத இறுதியில் எடுத்த கைது நடவடிக்கை நாடு முழுக்க சலசலப்பை ஏற்படுத்தியது. பீமா கோரேகான் கலவரம் தொடர்பாக, இடதுசாரி சிந்தனையாளரும், எழுத்தாளருமான, வரவர ராவ், மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ், செயற்பாட்டாளர்கள் அருண் பெரெய்ரா, கவுதம் நவ்லகா மற்றும் வெரூன் கோன்சல்வஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். உபா சட்டம் இவர்கள் மீது பாய்ந்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் தலையீட்டால், அவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்ட நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஐவரையும் வீட்டு காவலில் வைத்திருப்பது விசாரணையை பாதிக்கிறது என்றும், போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்றும், மகாராஷ்டிரா அரசு சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷ்கர் மேத்தா வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சந்திரசூட், "உங்கள் போலீஸ் அதிகாரிகளை இன்னும் பொறுப்போடு நடந்து கொள்ள சொல்லுங்கள். உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போதே, இது தொடர்பாக பிரஸ் மீட் செய்துள்ளனர். சுப்ரீம்கோர்ட் செய்வது சரியில்லை என்று, போலீசார் கூறுவதை கேட்க நாங்கள் விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.
முன்னதாக, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, புனே உதவி கமிஷனர், இந்த வழக்கு தொடர்பாக வெளியிட்ட பிரஸ் ரிலீஸ் என்பது, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக தனது ஆட்சேபனையை தெரிவித்தார். இருப்பினும், வழக்கு தொடர்பாக போலீசார் பிரஸ் மீட் செய்ய இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
மேலும், வழக்கு விசாரணையை செப்டம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை கைது செய்த ஐவரையும், வீட்டு காவலிலேயே வைத்திருக்க உத்தரவிட்டனர்.
நேற்று மகாராஷ்டிரா அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருந்ததாவது: கைது செய்யப்பட்டுள்ள இடதுசாரி ஆர்வலர்களுக்கு, இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கமான மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு உள்ளது. மாவோயிஸ்டுகளுடனான தொடர்புகள் பற்றிய ஆதாரங்கள் கிடைத்ததால்தான் ஐவரும் கைது செய்யப்பட்டனரே தவிர, அரசுக்கு எதிராக எதிர்க்கருத்து வைத்திருந்ததற்காகக் கைது செய்யப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.