நீங்க மட்டும்தான் செய்வீங்களா.. ரூ.600 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தது அசாம் பாஜக அரசு
கவுகாத்தி: ரூ.600 கோடி மதிப்புக்கு விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது அசாம் மாநில அரசு.
அசாமில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மத்திய பிரதேசம், சட்டீஸ்கரில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சி அரசுகள், அம்மாநிலங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளன. இதனால் காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் நண்பன் என்ற தோற்றம் உருவானது. இந்த நிலையில்தான், அசாம் அரசும், விவசாய கடன் விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.
அசாம் மாநில அரசின் செய்தித்தொடர்பாளரும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருமான சந்திர மோகன் போதோவாரி இன்று அசாம் அரசு எடுத்த இந்த முடிவை அறிவித்தார்.
கிசான் கிரெடிட் கார்டு மற்றும் பிஎஸ்யூ வங்கிகளில் பெற்ற விவசாய கடன்கள் இந்த தள்ளுபடி உத்தரவிற்குள் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
600 கோடி ரூபாய் அளவுக்கான கடன் தள்ளுபடியால் 8 லட்சம் விவசாயிகள் பலனடைவார்கள். இந்த முடிவு அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனோவால் தலைமையில் நேற்று இரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு விவசாயி பெற்ற அதிகபட்சம் ரூ.25,000 வரையிலான கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளதாகவும் சந்திர மோகன் தெரிவித்தார்.