அஸ்ஸாம் சட்டசபைத் தேர்தல்..புதிய கூட்டணி வியூகம்..2021-ம் ஆண்டிலாவது உயிர்ப்புடன் மீளுமா காங்கிரஸ்?
குவஹாத்தி: அஸ்ஸாம் சட்டசபை தேர்தலை புதிய மெகா கூட்டணி வியூகத்துடன் எதிர்கொள்கிறது காங்கிரஸ். இந்த வியூகத்தின் மூலமாக 2021-ம் ஆண்டிலாவது உயிர்ப்புடன் மீள்வோம் என்கிற நம்பிக்கையில் இருக்கிறது காங்கிரஸ்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் சட்டசபைகளுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் கேரளா, அஸ்ஸாம் மாநிலங்கள் மட்டுமே காங்கிரஸ் தனித்து வெல்ல முடியும் என்கிற நம்பிக்கை உள்ள மாநிலங்கள்.
தமிழகம், புதுவையில் திமுகவுடன் கூட்டணியை நம்பித்தான் காங்கிரஸ் உள்ளது. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள், காங்கிரஸ் கூட்டணி 3-வது அணியாகத்தான் உள்ளது. கேரளாவில் ஆளும் இடதுமுன்னணிக்கு சவாலாக உள்ளது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி. அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு இந்த நம்பிக்கையை வலுவாக்கி இருக்கிறது.
அஸ்ஸாமில் அமித்ஷா
அஸ்ஸாமில் பாஜகவிடம் பறிகொடுத்த அதிகாரத்தை மீண்டும் எப்படியாவது கைப்பற்றியாக வேண்டும் என்கிற முனைப்பில் உள்ளது காங்கிரஸ். அம்மாநிலத்தில் பாஜக என்பதே காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளில் இருந்து தாவிய தலைவர்களைக் கொண்ட கட்சியாகவே இருக்கிறது. இன்னமும் பாஜகவின், காங்கிரஸ் வேட்டை ஓயவில்லை. அடுத்த சில நாட்களில் பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா அஸ்ஸாம் செல்ல இருக்கிறார். அப்போது காங்கிரஸ் கட்சியின் சில எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளனர்.
புதிய கூட்டணி
இருந்தபோதும் இம்முறை அஸ்ஸாமில் காங்கிரஸ் ஒருவித நம்பிக்கையுடன் களத்தில் நிற்பதற்கு காரணமே அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி எனும் AIUDF தான். கடந்த காலங்களில் இந்த ஐக்கிய முன்னணியை உதாசீனப்படுத்தியதும் காங்கிரஸ்தான். ஆனால் இஸ்லாமியர் வாக்குகளைத் தக்க வைக்க வேறுவழியே இல்லாமல் இந்த முன்னணியின் கையை இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ்.
அஸ்ஸாம் சிறுபான்மை ஓட்டுகள்
அதுவும் மத்திய பாஜக அரசின் குடியுரிமை சட்ட திருத்த விவகாரம் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களிடத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொந்தளிப்பை வாக்குகளாக அறுவடை செய்ய வேண்டும் என்பதில் ஐக்கிய முன்னணியும் காங்கிரஸும் உறுதியாக உள்ளன. அத்துடன் பாஜகவுக்கு எதிரான அத்தனை மாநில கட்சிகளையும் ஒருங்கிணைத்து மெகா கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்வதுதான் காங்கிரஸ், ஏஐயூடிஎப்-ன் வியூகம்.
நம்பிக்கை
ஒவ்வொரு மாநிலத்திலும் மரண அடியை வாங்கி வரும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த வியூகம் நம்பிக்கையைத் தந்திருக்கிறது. பிறக்கப் போகும் 2021-ம் ஆண்டிலாவது எழுச்சியை மீளப் பெற முடியும் என்கிற நம்பிக்கையுடன் காங்கிரஸ் அஸ்ஸாம் தேர்தலை மலைபோல் நம்பி காத்திருக்கிறது.