அத்துமீறி முத்தம்.. கட்டி அணைத்து ஆசி.. அஸ்ஸாமில் ஒரு டுபாக்கூர் சாமியார்!
போலி சாமியார் அசாமில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அசாம்: நம்ம ஆட்களில் சிலருக்கு என்ன சொன்னாலும் சரி, எவ்வளவு பட்டாலும் சரி.. போலி சாமியார்களை நம்பி ஏமாறுவதுதான் பிழைப்பாகிவிட்டது.
போலி ஆசாமிகள் எத்தனையோ பேரை கைது செய்து சிறையில் தள்ளினாலும் பொதுமக்களில் சிலர் இன்னும் தொடர்ந்து இதுபோன்றவர்களிடம் விழுந்து கிடக்கத்தான் செய்கிறார்கள்.
விஷ்ணு பக்தர்
இப்படித்தான் அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் ஒரு சாமியார். அவரது பெயர் ராமு பிரகாஷ் சவுகான் என்பதாம். இவர் ஒரு விஷ்ணுவின் தீவிரமான பக்தர் என்று சொல்லி கொள்வாராம். இது மட்டும் சொன்னால் பரவாயில்லையே... ஒரு படிமேலே போய், தன் உடலில் கடவுள் விஷ்ணு இருக்கிறார் என்று பொதுமக்களிடம் சொல்லி வந்துள்ளார். அத்துடன் சிறப்பு ஆசியும் வழங்குவாராம் இவர்.
கட்டிப்பிடித்து முத்தம்
அந்த ஆசி எப்படி தெரியுமா? தன்னிடம் வருபவர்களை கட்டிப்பிடித்து கொள்வாராம். பிறகு அவர்களை அணைத்தபடியே முத்தம் கொடுத்துதான் ஆசியே வழங்குவாராம். அது பெண்களாக இருந்தாலும் இதே "கேவலம் கெட்ட" ஆசிதான். அப்படி கட்டியணைதுது முத்தம் கொடுத்தால் தீராத பிரச்சனைகூட தீரும் என்பாராம் விஷ்ணு பக்தர். எக்கச்சக்க பிரச்சனை, மற்றும் தீராத நோய்களில் பாதிக்கப்பட்டு, மனம் நொந்து தீர்வுக்காக இவரிடம் பெண்களோ, கட்டிப்பிடிப்பதையும், முத்தம் கொடுப்பதையும் பெரிதாக எடுத்து கொள்ள முடியவில்லை. ஏதோ தங்களுக்கு பிரச்சனை தீர்ந்தால் சரி என்றுதான் நினைத்து கொள்கிறார்கள்.
பிரபலமானார் சாமியார்
நாளுக்கு நாள் இது தொடர்ந்தது... பெண் பக்தைகளின் வருகையும் பெருகியது... கூட்டம் நிறைந்து வழிவது பல்வேறு பகுதிகளில் பரவியது... அப்படி காற்றுவாக்கில் பரவிய செய்தியின் அடிப்படையில் உள்ளூர் டி.வி.சேனல் ஒன்று விஷ்ணு பக்தரிடம் வந்துவிட்டது. அவரது செய்கைகளை அப்பட்டமாக படம் பிடித்து ஒளிபரப்பியது. இப்போது இன்னும் பிரபலமாகிவிட்டார் சாமியார்.
கப்சா சாமியார்
இப்போது போலீசார் விரைந்தனர். நேரிடையாக சாமியாரிடம் விசாரணை நடத்தினர். போலீசை பார்த்ததும், விஷ்ணு சாமியார் உடம்பு கடகடவென நடுங்க ஆரம்பித்தது. போலீசார் முழுசாக விசாரிக்கும் முன்பே, நான் ஒரு விஷ்ணு பக்தர் என்பதெல்லாம் சும்மா கப்சா... பெண்கள் உட்பட எல்லாரையும் ஏமாற்றிதான் வந்தேன் என்று ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டார். பிறகென்ன சாமியை "தூக்கி"க் கொண்டு போனார்கள் போலீஸார்.
|
எத்தனை பெரியார்கள் வந்தாலும்...
பொதுமக்களில் சிலருக்கு பக்தி முத்தி போய்விட்டால் சிந்திக்கும் திறனும் மழுங்கிவிடுமா என்ன? இதுபோன்றவர்களை ஏமாற்றவே ஒவ்வொருவராக கிளம்பி வந்து கொண்டே இருக்கிறார்கள்... வந்த வேகத்தில் கைதாகி சிறைக்கு சென்று கொண்டே இருக்கிறார்கள்.. ஆயிரம் 'பெரியார்கள்' வந்தாலும் சிலரை திருத்தவே முடிவதில்லை!