மிசோரமில் 5 போலீசார் சுட்டு கொலை- பின்னணியில் போதைப் பொருள் மாஃபியா - அஸ்ஸாம் முதல்வர் ஷாக் தகவல்
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த 5 போலீசார் மிசோரமில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் போதைப் பொருள் கடத்தும் மாஃபியாக்கள் இருப்பதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்துக்கும் அண்டை மாநிலங்களான மேகாலயா, மிசோரம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் மிசோரம் எல்லைக்குள் அஸ்ஸாம் போலீசார் பெரும் எண்ணிக்கையில் நுழைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
அசாம் - மிசோரம் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்... திடீர் வன்முறையில் 6 போலீசார் பலி.. பரபர தகவல்
அப்போது பயங்கர மோதல் வெடித்தது. அஸ்ஸாம் மற்றும் மிசோரம் மாநிலங்களின் போலீசார் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்தியாவில் இரு மாநில போலீசார் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெறுவது என்பது இதுதான் முறை. இதில் 5 அஸ்ஸாம் போலீசார் உயிரிழந்தனர்.
மிசோரம் நெடுஞ்சாலை முடக்கம்
இதனால் மிசோரம்- அஸ்ஸாம் இடையே பெரும் பதற்றம் எழுந்துள்ளது. மிசோரம் செல்லும் நெடுஞ்சாலையை அஸ்ஸாம் இயக்கங்கள் முற்றுகையிட்டு வாகனத் தடையை ஏற்படுத்தி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக இரு மாநில முதல்வர்களும் பரஸ்பரம் கடுமையாக குற்றம்சாட்டியும் வருகின்றனர்.
மேகலாயாவுடன் பிரச்சனை
இத்தனைக்கும் வடகிழக்கு மாநிலங்களில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சுற்றுப் பயணம் மேற்கொண்டுவிட்டு திரும்பிய 48 மணிநேரத்தில் இத்தகைய மோதல் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் மேகாலயா எல்லையில் பிரச்சனை ஏற்பட இருந்த நிலையில் அஸ்ஸாம்- மேகாலயா அதிகாரிகள் பேச்சுவார்த்தையை நடத்தி பதற்றத்தை தணித்தனர்.
அஸ்ஸாம் சட்டம்
இந்நிலையில் மிசோரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு வெறும் எல்லை பிரச்சனை மட்டுமே காரணம் இல்லை என பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மா. இது தொடர்பாக அவர் கூறுகையில், அஸ்ஸாம் மாநில அரசு அண்மையில் பசு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தது. இது மாட்டிறைச்சியை அதிகம் பயன்படுத்தும் பிற வடகிழக்கு மாநில மக்களுக்கு எதிரானது என்ற கருத்து பரப்பப்படுகிறது.
மிசோரம் போதை பொருள் கடத்தல்
அஸ்ஸாமின் இந்த பசு பாதுகாப்பு சட்டத்தால் இதர வடகிழக்கு மாநிலங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை; பாதிப்பும் ஏற்படாது என ஏற்கனவே விளக்கம் கொடுத்துவிட்டோம். ஆனாலும் தவறான புரிதல்களுடன் பிற மாநில மக்கள் இருந்து வருகின்றனர். அதேபோல் வடகிழக்கு மாநிலங்கள் குறிப்பாக மிசோரம் போதைப் பொருள் கடத்தலின் மையமாக இருக்கிறது. மியான்மரில் இருந்து கொண்டுவரப்படும் போதைப் பொருட்கள் மிசோரம், அஸ்ஸாமின் பராக் சமவெளி வழியாக வடகிழக்கு மாநிலங்களைவிட்டு வெளியே எடுத்துச் செல்லப்பட்டு பஞ்சாப் போதைப் பொருட்கள் கடத்தும் கும்பலிடம் ஒப்படைக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தியது மாஃபியாக்கள்?
இந்த போதைப் பொருட்கள் கடத்தும் கும்பல்தான் அஸ்ஸாம் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கக் கூடும். பொதுமக்கள் எப்படி புல்லட் ப்ரூப் உடைகளுடன் ஸ்னைப்பர்கள் மூலம் தாக்குதல் நடத்த முடியும்? இதற்கான வீடியோ ஆதாரங்களும் இருக்கின்றன. இரு மாநில எல்லை பிரச்சனையை சாதகமாக்கிக் கொள்ள இந்த கும்பல் முயற்சிகிறது என கருதுகிறேன் என தெரிவித்துள்ளார்.
மியான்மர் அகதிகள்
மேலும் மியான்மரில் இருந்து அகதிகள் உள்ளே நுழையவும் மிசோரம் அரசு அனுமதித்துள்ளது. இத்தனைக்கும் மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை. ஆனால் மத்திய அரசை மீறி மிசோரம் அரசு அகதிகளுக்கு அடைக்கலம் தந்து வருகிறது. இதுவும் பிரச்சனைகளுக்குக் காரணம். இது தொடர்பாக மத்திய அரசிடம் தெரிவிக்க இருக்கிறோம் என்றார் ஹிமந்த் பிஸ்வா சர்மா.