தேர்தல் தோல்வி.. அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகய் நாளை ராஜினாமா!
குவஹாத்தி: லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று அஸ்ஸாம் மாநில முதல்வர் தருண் கோகய் நாளை தமது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.
லோக்சபா தேர்தலில் அஸ்ஸாம் மாநிலத்தின் மொத்தம் 14 தொகுதிகளில் பாஜக 7ஐ கைப்பற்றியது. ஆளும் காங்கிரஸ் கட்சியால் 3 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது.
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியும் 3 இடங்களைக் கைப்பற்றியது. இந்த தேர்தல் முடிவுகள் வெளியானவுடனேயே தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார் அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகய்.
இருப்பினும் அவர் ராஜினாமா செய்யவில்லை. ஆனாலும் அஸ்ஸாம் மாநில கட்சிக்குள் தருண் கோகய்க்கு கடும் எதிர்ப்பு நிலவியது. இதனால் வேறுவழியின்றி முதல்வர் பதவியை நாளை ராஜினாமா செய்ய இருக்கிறார் கோகய்.
ஏற்கெனவே பீகார் மாநிலத்தில் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக ஜிதன்ராம் மஞ்சி பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.