பாஜக குதிரை பேரத்தை தடுக்க... ராஜஸ்தானில் தஞ்சமடைந்த... அசாம் காங். கூட்டணி வேட்பாளர்கள்
திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் குதிரை பேரத்திற்குப் பயந்து காங்கிரஸ் கூட்டணி 44 வேட்பாளர்களை ராஜஸ்தான் மாநிலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.
அசாம் மாநிலத்தில் தற்போது முதல்வர் சர்பானந்த சோனவால் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இங்குள்ள 126 தொகுதிகளுக்கு மூன்று கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
வரும் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கூட்டணி தனது வேட்பாளர்களை ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளது.
அசாம் தேர்தல்
அசாம் மாநிலத்தில் ஆளும் பாஜகவை நிச்சயம் வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் களமிறங்கியது. இதற்காக அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் காங்கிரஸ் மிகவும் வலுவான ஒரு கூட்டணியை உருவாக்கியிருந்தது. தற்போது வரை வெளியான கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலும் பாஜகவே மீண்டும் ஆட்சியை அமைக்கவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்
இந்நிலையில், காங்கிரஸ் கூட்டணியில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட 22 வேட்பாளர்கள் தற்போது ராஜஸ்தான் மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்திலேயே தங்க வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு, பாஜக குதிரை பேரம் நடத்தும் என்றும் அதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் காங்கிரஸ் கூறியுள்ளது. ராஜஸ்தானில் தற்போது அசோக் கெலாட் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது.
குதிரை பேரம்
இது தொடர்பாகக் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா கூறுகையில் ''இந்தத் தேர்தலில் பாஜக தோல்வியடையும். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைப்பதை பாஜக வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அசாமிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கவே எங்கள் கூட்டணியின் வேட்பாளர்கள் தற்போது ஜெய்ப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்" என்று அவர் குறிப்பிட்டார்.
அசாமில் என்ன நிலைமை
அசாம் மாநிலத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியை அமைப்போம் என பாஜக தலைமை நம்பிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும், குடியுரிமை திருத்தச் சட்டம், என்ஆர்சி உள்ளிட்ட சட்டங்களால் அசாம் மக்கள் பாஜக அரசு மீது கடும் கோபத்திலுள்ளதாகவும் அதை மக்கள் தேர்தலில் காட்டுவார்கள் என்றும் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.