இந்தியர்கள் என்று நிரூபிக்க.. ஒன்றரை ஆண்டுகள்.. குடும்பத்தோடு தடுப்பு முகாமில்.. அசாம் நிலவரம் இது!
குவஹாத்தி: 'சட்டவிரோத வெளிநாட்டினர்' என்று கூறி தடுப்பு மையத்தில் ஒன்றரை வருடங்களாக அடைத்து வைக்கப்பட்ட பிறகு, இந்த புத்தாண்டுதான், முகமது நூர் உசேன் (34), அவரது மனைவி சஹேரா பேகம் (26), மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளுக்கு சுதந்திரத்தையும் குடியுரிமையையும் வழங்கியுள்ளது. வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தின் (FT) மறு விசாரணையில் இவர்கள் இந்தியர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"நாங்கள் பெருமைமிக்க இந்தியர்கள். நாங்கள் அசாமைச் சேர்ந்தவர்கள். அவர்கள் எங்களை வங்கதேசத்தினர் என்று தவறாகக் குற்றம் சாட்டினர், நாங்கள் சட்டவிரோதமாக எல்லையைத் தாண்டினோம் என்று சொன்னார்கள். அது எப்படி சாத்தியம்? நான் இங்குதானே பிறந்தேன், " என்று அஸ்ஸாமின் உதல்குரி மாவட்டத்தில் உள்ள லாடோங் கிராமத்தைச் சேர்ந்த உசேன் கேட்கும்போது அவர் குரலில் அவ்வளவு ஆற்றாமை வெளிப்படுகிறது.
அசாமில் செயல்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவு (NRC) திட்டத்தால்தான் இத்தனை பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது உசேன் தாத்தா பெயர் 1965ம் ஆண்டு வாக்காளர் அடையாள அட்டையில் உள்ளது. 1966ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் சஹேரா பேகம் பெற்றோர் பெயர் உள்ளது. ஆனால், குவஹாத்தி காவல்துறை இதையெல்லாம் பரிசீலிக்க தயாராக இல்லை.
2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சஹேரா பேகம், வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தை அணுக உத்தரவிடப்பட்டார். 2018ம் ஆண்டு ஜனவரியில், ஹூசைனும் வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தை அணுக உத்தரவிடப்பட்டார். ரூ.4000 ஃபீஸ் கட்டி ஹுசைன் ஒரு வழக்கறிஞரை தனக்காக ஆஜராக ஏற்பாடு செய்தார். ஆனால் அவர் ஆகஸ்ட் மாதம் கேசிலிருந்து விலகி விட்டார்.
வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தில் கடந்த ஜூலை 31 வரை 4.34 கேஸ்கள் பதிவாகியுள்ளன. அதில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன. போதிய கட்டணம் செலுத்த முடியாமல் பல வழக்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.
"வழக்கறிஞர் என்னிடம் அவருடைய கட்டணம் மற்றும் பிற செலவுகளை என்னால் ஏற்க முடியாது என்பதால், குவஹாத்தியிலிருந்து தப்பி ஓடுங்கள் என்று யோசனை சொன்னார். இல்லையென்றால் போலீசார் என்னைக் கைது செய்யலாம் என்று அவர் கூறினார். ஆனால், நான் அவரிடம், 'நான் ஏன் தப்பி ஓட வேண்டும்? நான் என்ன தவறு செய்தேன்? என்று கேட்டேன் " என்கிறார் ஹுசைன்.
ஆயுதங்களை ஏந்திய அசாம் இளைஞர்களை... அமைதி பாதைக்கு திருப்பியது நாங்கதான்... அமித்ஷா பெருமிதம்!
இந்த நிலையில்தான், 2018 மே 29ல், பேகத்தை 'வெளிநாட்டவர்' வெளிநாட்டினர் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. ஹுசைனை அடுத்த ஆண்டு இதேபோல அறிவித்தது.
ஜூன் 2019 இல், தம்பதியினர் கைது செய்யப்பட்டு கோல்பாரா மாவட்டத்தில் உள்ள தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டபோது, அவர்களின் உலகம் முடிந்துபோனது.
"குழந்தைகளை கவனித்துக்கொள்ள யாரும் இல்லை. எங்கள் உறவினர்கள் கிராமத்தில் உள்ளனர், எனவே நாங்கள் எங்கள் குழந்தைகளை (7 மற்றும் 5 வயது) எங்களுடன் தடுப்பு மையத்திற்கு அழைத்துச் சென்றோம், "என்கிறார் பேகம். மூத்த மகன் ஷாஜகான் பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் போனது.
"சிறையில், என் குழந்தைகள் எப்போது வீடு திரும்புவோம் என்று திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார்கள்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிலையில்தான் உறவினர்கள் சிலர் குவஹாத்தியைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞரான அமன் வாதுட்டை அணுகினர். வக்கீல்கள் சையத் புர்ஹானூர் ரஹ்மான் மற்றும் ஜாகிர் உசேன் ஆகியோருடன் உயர் நீதிமன்றத்தை அணுகினர்.
ஆனால், "வெளிநாட்டவர்" என்று குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் வழக்கறிஞர்கள் கிடைப்பது இல்லை. பல இந்திய குடிமக்கள் குடியுரிமை இல்லாதவர்களாக மாறி வருகிறார்கள், ஏனெனில் அவர்கள் சட்டப்பூர்வ பிரதிநிதித்துவத்தை கூட வாங்க முடியாது, "என்கிறார் வழக்கறிஞர் வாதுட்.
டிசம்பர் 16 அன்று, உசேன் மற்றும் பேகம் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். சில வாரங்களுக்குப் பிறகு, உசேன் இந்திய குடிமகன் என்று அறிவித்தது.
புதன்கிழமை, பேகமும் இந்தியர் என அறிவிக்கப்பட்டுள்ளார்.
வழக்கறிஞர்களும் தம்பதியினரும் தீர்ப்பை இனிப்பு கொடுத்து கொண்டாடியபோது, வாதுட், 7 வயது சிறுவன், ஷாஜகானிடம், ஒரு கேள்வியை கேட்டார். "நீ பெரியவனாகிய பிறகு என்னவாக விரும்புகிறாய் தம்பி?" என்றார். சற்றும் யோசிக்காமல் சிறுவன் ஷாஜகான், "வழக்கறிஞர்" என்று பதிலளித்தார்.