வழிகாட்டிய ஜல்லிக்கட்டு புரட்சி- தடையை உடைத்து அஸ்ஸாமில் நாளை எருது சண்டை!!
தமிழக அவசர சட்டத்தை முன்வைத்து எருது சண்டை நடத்தப் போவதாக அஸ்ஸாம் கலாசார அமைப்பு அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தடையை உடைத்து எருது சண்டை நாளை நடைபெறுகிறது.
குவஹாத்தி: ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்து தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை வழிகாட்டியாக கொண்டு அஸ்ஸாமில் உச்சநீதிமன்ற தடையை உடைத்து நாளை எருது சண்டை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாமில் தமிழினத்தின் பொங்கலைப் போல பொகாலி பிஹூ என்பது பண்பாட்டு பண்டிகை. இந்த பண்டிகையின் போது வயல் வெளிகளில் எருது சண்டை நடத்தப்படும்.
ஆனால் இந்த எருது சண்டைக்கு உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தடை விதித்ததது. இதையடுத்து இந்த ஆண்டு எருது சண்டை நடைபெறாது என இதற்காக போராடி வந்த அமைப்பு அறிவித்தது.
இதனிடையே ஜல்லிக்கட்டுக்காக தமிழகமே ஒட்டுமொத்த கிளர்ந்து எழுந்து புரட்சியில் ஈடுபட்டது. இந்த புரட்சி இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களையும் உலுக்கி எடுத்துள்ளது.
இப்புரட்சியின் விளைவாக ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு தற்போது மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின் இந்த முயற்சியை பின்பற்றி ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, அஸ்ஸாம் மாநிலங்களில் பாரம்பரிய விளையாட்டுகள் மீதான தடையை உடைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அஸ்ஸாமில் எருது சண்டைக்காக போராடி வரும் அமைப்பின் செயலர் பிரணாப்ஜோதி தாஸ் கூறுகையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் வழிவகை செய்கிறது; ஆகையால் நாங்களும் தடையை உடைத்து எருது சண்டையை நாளை நடத்தப் போகிறோம் என அறிவித்திருக்கிறார்.
உடையட்டும் தடைகள்!