என்ஆர்சியிலிருந்து நீக்கப்பட்ட 19,06,657 பேருக்கு.. மார்ச் 20 முதல் நிராகரிப்பு சீட்டு! முக்கியமானது
குவஹாத்தி: என்.ஆர்.சி யிலிருந்து நீக்கப்பட்ட 19 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு மார்ச் 20 முதல் 'நிராகரிப்பு சீட்டு' வழங்க என்.ஆர்.சி ஆணையம் திட்டமிட்டுள்ளது என்று அசாம் அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. நிராகரிப்பு சீட்டு இறுதியில் என்ஆர்சியிலிருந்து ஒரு நபரின் பெயரை விலக்குவதற்கான காரணங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்
கிழக்கு பாகிஸ்தானாக 1971ம் ஆண்டு வரை இருந்த இப்போதைய வங்கதேசம் கடுமையான போருக்கு பின் சுதந்திரம் பெற்று வங்கதேசமாக உருவானது. ஆனால் அப்போது லட்சக்கணக்கானோர் வங்கதேசத்திற்கு அருகில் உள்ள அசாமி அகதிகளாக குடியேறினர். இதற்கு அஸ்ஸாம் மாணவர் அமைப்பு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வன்முறை வெடித்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் 1980களில் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து அசாம் மாணவர் அமைப்பும், வேறு சில பிராந்திய குழுக்களும் 1985ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்படி 1971 மார்ச் 24 ஆம் தேதியன்று அசாமில் வாழ்ந்ததாக நிரூபிக்க முடியாதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றும், அவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாக கருதப்படுவார்கள் என்றும் அந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு
இதனிடையே அஸ்ஸாமில் தேசிய குடியுரிமைப் பதிவேட்டைப் புதுப்பிக்க வேண்டும் என்று கோரி 2009 ஆம் ஆண்டில் ஆபிஜீத் சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன்படி உச்ச நீதிமன்றம் விதித்த பல்வேறு கெடுவிற்கு பிறகு அஸ்ஸாம் தேசிய குடியுரிமை பதிவேடு இறுதி பட்டியல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி வெளியிடப்பட்டது.
நிரூபிக்கணும்
1971 மார்ச் 24 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ அசாமுக்கு வந்துவிட்டதாக நிரூபித்தவர்களின் பெயர்கள் மட்டும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற்றுள்ளன.
நிலம் மற்றும் குத்தகை ஆவணங்கள், வாக்காளர் அடையாள அட்டைகள் அல்லது பாஸ்போர்ட்கள் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து, குடிமக்கள் அந்தஸ்துக்கு அவர்கள் உரிமை கோர வேண்டும் என்று கூறியிருந்தது.
19 லட்சம் பேர்
1971க்குப் பிறகு பிறந்தவர்கள், தங்களுடைய பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி ஆகியோர் மேற்படி தேதிக்கு முன்னதாகவே இந்தியாவில் குடியேறியவர்கள் என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படிஇறுதி பட்டியலில் 19,06,657 நபர்களின் பெயர்கள் அஸ்ஸாம் என்ஆர்சி பட்டியலில் இடம் பெறவில்லை.
120 நாட்கள் அவகாசம்
இறுதி பட்டியலில் இடம் பெறாதவர்கள் நிராகரிக்கப்பட்ட சீட்டுகளுடன் வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களில் மேல்முறையீடு செய்யலாம் என்று 60 நாட்கள் காலஅவகாசம் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் மேல்முறையீடு செய்ய காலஅவகாசம் 120 நாட்கள் ஆக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான அரசின் செயல்முறைகள் மிகவும் தாமதம் ஆனது. .
மார்ச் 20 முதல்
இந்நிலையில் என்.ஆர்.சி யிலிருந்து நீக்கப்பட்ட 19 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு மார்ச் 20 முதல் ‘நிராகரிப்பு சீட்டு' வழங்க என்.ஆர்.சி ஆணையம் திட்டமிட்டுள்ளது என்று அசாம் அரசு தெரிவித்துள்ளது. நிராகரிப்பு சீட்டுக்கான இறுதியில் என்ஆர்சியில் ஒரு நபரை விலக்குவதற்கான காரணங்களை குறிப்பிட்டிருக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
எவ்வளவு ஒதுக்கீடு
காங்கிரஸ் எம்.எல்.ஏ ரெக்கிபுதீன் அகமது என்ஆர்சி குறித்து எழுப்பிய கேள்விக்கு அஸ்ஸாம் அமைச்சர் சந்திர மோகன் படோவரி மேற்கண்ட தகவலை தெரிவித்தார். தற்போது, ஸ்பீக்கிங் ஆர்டரை ஸ்கேன் செய்வது தொடர்பான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த பணி முடிந்ததும், 20/03/2020 முதல் நிராகரிப்பு சீட்டை வெளியிடுவதற்கான திட்டம் உள்ளது" என்று அமைச்ர் படோவரி கூறினார். காங்கிரஸ் எம்.எல்.ஏ அபுல் கலாம் ரஷீத் ஆலமின் எழுப்பிய மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் படோவரி, என்.ஆர்.சி புதுப்பிப்பு பணிகளுக்காக மொத்தம் ரூ .1,348.13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.