அஸ்ஸாம் அமைச்சர் சுமித்ராவின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
கவுஹாத்தி: அஸ்ஸாம் மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் சுமித்ரா டாலி பாதிரின் பாதுகாவலர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அஸ்ஸாம் மாநில சுற்றுலாத் துறை அமைச்சராக உள்ளவர் சுமித்ரா டாலி பாதிர். அவரது பாதுகாவலர் அகில் ஹலோய். அவர் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல பணிக்கு வந்துள்ளார். பணி முடிந்து அமைச்சரின் வீட்டு வளாகத்தில் உள்ள தனது கூடாரத்திற்கு இரவு நேரத்தில் சென்றுள்ளார்.
இரவு 11 மணிக்கு தனது கூடாரத்திற்கு சென்ற அவர் சிறிது நேரத்தில் தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டார். துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டு அவரது சக ஊழியர்கள் ஓடி வந்து பார்த்தபோது ஹலோய் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
உடனே அவரை கவுஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் அவர் உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் நடந்தபோது அமைச்சர் சுமித்ரா வீட்டில் இல்லை என்று தெரிய வந்துள்ளது.