மாநிலம் விட்டு மாநிலம் இறைச்சிக்காக கடத்தல்... நாகாலாந்து கும்பலிடம் இருந்து 72 தெருநாய்கள் மீட்பு
அஸ்ஸாமில் இருந்து நாகாலாந்துக்கு இறைச்சிக்காக கடத்தப்பட்ட 72 தெருநாய்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஜோர்கட்: அஸ்ஸாமில் தெருநாய்களை கடத்தி நாகலாந்துக்கு இறைச்சிக்காக கடத்திச் செல்லும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. அஸ்ஸாமிலிருந்து நாகாலாந்துக்கு கடத்தப்பட்ட 72 தெருநாய்கள் மீட்கப்பட்டுள்ளன.
நாகாலாந்தில் நாய்க்கறிக்கு கிராக்கி அதிகம். ஞாயிற்றுக்கிழமைகளில் நாய்க்கறி விற்பனை வெகு ஜோராக நடைபெறும். நாய்க்கறி கிலோ ஆயிரக்கணக்கில் விற்பனையாகிறது.
இதனால் நாகாலாந்தில் இப்போது நாய்களே இல்லை என்கிற நிலை உருவாகிவிட்டது. நாய்கறிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் வியாபாரிகள் அண்டை மாநில தெருநாய்களுக்கு குறிவைத்து வருகின்றனர்.
அஸ்ஸாமில் இருந்து நாகாலாந்துக்குள் நாய்களை கடத்திச் செல்வது எளிதானது. ஆகையால் அஸ்ஸாம் மாநில தெருநாய்களுக்கு குறிவைக்கப்பட்டு கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெறுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அஸ்ஸாமின் ஜோர்கட் பகுதியில் இருந்து நாகாலாந்துக்கு நாய்கள் கடத்தப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் நாகாலாந்துக்கு கடத்தபட்ட 72 நாய்கள் பிடிபட்டன. நாய்களை கடத்திய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.