அஸ்ஸாம் அம்புபச்சி திருவிழா தொடக்கம்- நாகா சாதுக்களின் 'நிர்வாண' ஊர்வலத்துக்கு தடை!
குவஹாத்தி: அஸ்ஸாம் காமாக்யா கோவிலில் புகழ்பெற்ற அம்புபச்சி திருவிழா நேற்று தொடங்கியது. இந்த ஆண்டு நாகா சாதுக்களின் நிர்வாண ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காமாக்யா கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் அம்புபச்சி திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் நாடு முழுவதும் பங்கேற்பர். அதேபோல் நிர்வாண சாமியார்களான நாகா சாதுக்களும் 500க்கும் மேற்பட்டோர் முகாமிடுவர்.
அம்புபச்சி திருவிழாவில் நிர்வாண சாமியார்கள் கோவில் வளாகத்தில் ஊர்வலம் நடத்துவதும் வழக்கம். தற்போது அஸ்ஸாம் மாநில பாஜக அம்புபச்சி திருவிழாவை சர்ச்சைகள் இல்லாமல் நடத்த திட்டமிட்டது.
குறிப்பாக சுற்றுலா வருவாய் பாதிக்காத வகையில் திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கும் நாகா சாதுக்களின் நிர்வாண ஊர்வலத்துக்கு இந்த ஆண்டு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. அவர்களுக்கு தனியே ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் நாகா சாதுக்களின் முகாம்களில் தங்குதடையின்றி கிடைக்கும் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இத் திருவிழாவை நேற்று அம்மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால் தொடங்கி வைத்தார். இத்திருவிழாவையொட்டி அரையாடை அணிந்தபடிதான் நாகா சாதுக்கள் கோவிலுக்குள் வலம் வந்தனர்.