சிக்கன், மட்டனைத் தூக்கிச் சாப்பிட்ட எலி.. கிலோ ரூ. 200க்கு விற்பனை!
அசாமில் எலிக்கறி விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.
கவுகாத்தி: அசாமில் எலிக்கறி விற்பனை சூடு பிடித்துள்ளது. ஆடு, கோழிக்கறிக்கு இணையாக ஒரு கிலோ எலிக்கறி ரூ. 200க்கு அங்கு விற்பனை செய்யப்படுகிறது.
அசாமில் நெல் வயல்களில் புகுந்து எலிகள் பயிர்களை நாசப்படுத்துவது அதிகம். இதனால், அங்குள்ள விவசாயிகள், எலிப்பொறி வைத்து எலிகளை வேட்டையாடுகின்றனர். ஆனால், அவ்வாறு வேட்டையாடப்படும் எலிகளை அவர்கள் வேறு இடங்களில் கொண்டுபோய் விடுவதில்லை, அவற்றை சந்தையில் விற்று விடுகின்றனர்.
அசாமில் உள்ள பக்சா மாவட்டம் குமரிகட்டா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தையில் இந்த எலிக்கறி விற்பனை மிகவும் அமோகமாக நடைபெற்று வருகிறது. கோழிகறி, ஆட்டுக்கறி மற்றும் பன்றிக் கறியை விட எலிக்கறி அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகக் கூறுகிறார்கள் அப்பகுதி வியாபாரிகள்.
எலிக்கறி விற்பனை:
இந்த சந்தையில் ஒரு கிலோ எலிக்கறி ரூ. 200க்கு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் எலிகளை வியாபாரிகள் சந்தைகளில் அதிக விலை வைத்து விற்பனை செய்து வருகின்றனர். புதிதாக பிடிக்கப்பட்ட எலிகள், தோல் உரிக்கப்பட்ட எலிக்கறி, வேக வைக்கப்பட்ட எலிக்கறி என விதவிதமாக எலிக்கறி விற்பனை செய்யப்படுகிறது.
பகுதிநேரத் தொழில்:
எலிக்கறி விற்பனை அங்கு சூடு பிடித்துள்ளதால் பழங்குடி மக்கள் மற்றும் விவசாயிகள் எலிகளைப் பிடித்து விற்பனை செய்வதையும் பகுதி நேர தொழிலாக செய்து வருகின்றனர். எலிக்கறி விற்பனை சூடுபிடித்து இருப்பதால், கோழிக்கறி, பன்றிக்கறி விற்பனை மந்தமாகியுள்ளது.
மூங்கில் எலி பிடிப்பான்:
இரவு நேரத்தில் மூங்கில் மூலம் அமைக்கப்பட்ட எலி பிடிப்பான் மூலம் எலிகள் பிடிக்கப்படுகின்றன. ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 கிலோ எலிகள் வரை பிடித்து வருகிறார்கள். சில நேரத்தில் ஒரு எலி ஒரு கிலோவுக்கும் அதிகமான எடையில் இருக்கும் என்கின்றனர் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர்.
பாரம்பரிய உணவு:
நல்பாரி, பார்பேட்டா, குமாரிக்கட்டா மாவட்டங்களில் பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள், உள்ளிட்ட பல்வேறு சமூக மக்களின் பாரம்பரிய உணவாக எலிக்கறி இருப்பதால், இதை மக்கள் விரும்பி வாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.