வீட்டுக்குள்ள யாருங்க.. கொஞ்சம் உற்றுப் பாருங்க... ஆஹா.. தலைதெறிக்க ஓட்டம் பிடித்த மக்கள்
கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையில், காசிரங்கா விலங்கியல் பூங்காவிலிருந்து தப்பிய புலி, வீடு ஒன்றில், மெத்தையில் படுத்திருந்ததை கண்டு, அதிர்ச்சியடைந்தனர்.
அசாமில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால், பிரம்மபுத்ரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேமாஜி, லக்கிம்பூர், பிஸ்வாநாட், ஜோர்கட், தரங், பார்பேட்டா, நல்பாரி, மஜூலி, சிரங்க், திபுருகார், உள்ளிட்ட 21 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள நீர் சூழ்ந்த சுமார் 800 கிராமங்கள் தனித்தீவு போல் காட்சி அளிக்கின்றன. பலரது வீடுகள் இடிந்துள்ளன. ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவு விவசாய நிலம் தண்ணீர் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 67 பேர் பலியாகி உள்ளனர். ஏறக்குறைய 64 லட்சம் பேர் வீடுகளையும், உடமைகளையும் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரம், உலக புகழ்பெற்ற காசிரங்கா தேசிய விலங்கியல் பூங்காவிற்குள் வெள்ளநீர் புகுந்ததில் ஏராளமான வனவிலங்குகள் உயிரிழந்துள்ளன. பல விலங்குகள் வெள்ளத்தில் தப்பி, வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளன.
Assam: A Bengal Tiger found sitting on a bed in a house in flood hit Harmati area of Kaziranga. Forest officials have reached the spot. #AssamFloods pic.twitter.com/Sv0wFhH8Ke
— ANI (@ANI) July 18, 2019
இந்நிலையில், வெள்ளத்தில் தப்பிய புலி ஒன்று, தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் புகுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லை. வீட்டின் உரிமையாளர்கள் திரும்பி வந்து போது, வீட்டிற்குள் புலியின் உறுமல் சத்தம் கேட்டுள்ளது.
சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர், வெளியில் இருந்த இடைவெளி வழியாக பார்த்த போது, மெத்தை மீது புலி படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். புலி இருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து, தகவலறிந்து வந்த வனத்துறையினர், மயக்க ஊசி செலுத்தி புலியை பூங்காவிற்கு கொண்டுச் சென்றனர்.