கொடுமை செய்த கணவன் தலையை கோடாரியால் வெட்டி கேரி பேக்கில் போட்ட மனைவி- அதிர்ந்த போலீஸ்
அடித்து கொடுமைப்படுத்திய கணவனின் தலையை கோடரியால் வெட்டிக்கொன்று அசால்டாக அதை கேரி பேக்கில் எடுத்துக்கொண்டு போய் போலீஸ் ஸ்டேசனில் சரணடைந்துள்ளார் ஒரு பெண்.
திஸ்பூர்: நம் ஊரில் கணவன் அடித்தால் சில பெண்கள் அடி வாங்கிக்கொண்டு அதே கணவனுக்கு சமைத்து கொடுத்து விட்டு அமைதியாக இருப்பார்கள். சில பெண்கள் திருப்பி அடிப்பார்கள். அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு பெண் அடித்து கொடுமைப்படுத்திய கணவனை கோடாரியால் வெட்டி கொலை செய்து
உள்ளார். அதோடு தலையை தனியாக எடுத்துக்கொண்டு போய் போலீஸ் ஸ்டேசனில் சரணடைந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் முதிராம் என்பதாகும். இவருக்கும் குணேஷ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.
இரண்டு மகன்கள், 3 மகள்கள் பிறந்த பின்னரும் அடித்து உதைத்து மனைவியை கொடுமைப்படுத்தியுள்ளார். கணவனின் கொடுமை தாங்காத அந்த பெண், பிரிந்து விடுவது என்று முடிவு செய்தார். ஆனாலும் முடியவில்லை. சகித்துக்கொண்டார்.
மனைவியை அடித்த கணவன்
நாளுக்கு நாள் அடியும் உதையும் அதிகரித்தது. பிள்ளைகளுக்காக பொறுத்துக்கொண்டார். கடந்த செவ்வாய்கிழமை குடி போதையில் வந்த முதிராம், வழக்கம் போல அடிக்க கை ஓங்கினார். விலகி ஓடினார் குணேஷ்வரி. விடாமல் விரட்டி அடித்தார் முதிராம். பக்கத்தில் இருந்த கோடாரியால் அடிக்க முயன்றார். அங்கேதான் திருப்புமுனை ஏற்பட்டது.
வெட்டிய மனைவி
முதிராமின் கையில் இருந்த கோடாரியை பறித்து ஒரே போடாக போட்டார் குணேஷ்வரி. முதிராமின் தலை துண்டாக விழுந்தது. அந்த தலையை எடுத்து ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டுக்கொண்டு 5 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று தால்பூர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
பிளாஷ் பேக் கதை
பிளாஸ்டிக் பேக்கில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். ஒரு ஆணின் தலை இருந்தது. அப்பாவியாக இருந்த அந்தப் பெண் எப்படி கொலை செய்தார் என்று கேட்டதற்கு தனது பிளாஷ்பேக் கதையை சொன்னார் குணேஷ்வரி.
சிறைக்குப் போன பெண்
தன்னை கொல்ல வந்த கணவனிடம் இருந்து தற்காத்துக்கொள்ளவே இப்படி செய்ததாக கூறினார். கதையை கேட்ட போலீசார் குணேஷ்வரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர். அடித்த கணவனை வெட்டிக்கொன்று தலையை அசால்டாக கேரிபேக்கில் எடுத்துப்போன சம்பவம் தால்பூர் காவல்நிலைய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரை இழந்த 5 குழந்தைகளின் நிலைதான் பரிதாபம்.