தனித்தீவுப் போல் காட்சியளிக்கும் அசாம்... வனவிலங்குகளின் நிலைமை படுமோசம்
கவுகாத்தி: அசாமில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள காசிரங்கா உயிரியல் பூங்காவின் விலங்குகள் கிடைத்த மேடான இடங்களில் தஞ்சமடைந்துள்ளன.
அசாமில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால், பிரம்மபுத்ரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேமாஜி, லக்கிம்பூர், பிஸ்வாநாட், ஜோர்கட், தரங், பார்பேட்டா, நல்பாரி, மஜூலி, சிரங்க், திபுருகார், உள்ளிட்ட 28 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள நீர் சூழ்ந்த சுமார் 4,128 கிராமங்கள் தனித்தீவு போல் காட்சி அளிக்கின்றன. பலரது வீடுகள் இடிந்துள்ளன. ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவு விவசாய நிலம் தண்ணீர் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 67 பேர் பலியாகி உள்ளனர். ஏறக்குறைய 60 லட்சம் பேர் வீடுகளையும், உடமைகளையும் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
|
விலங்குகள் உயிரிழப்பு
அதே நேரம், உலக புகழ்பெற்ற காசிரங்கா தேசிய விலங்கியல் பூங்காவிற்குள் வெள்ளநீர் புகுந்ததில் ஏராளமான வனவிலங்குகள் உயிரிழந்துள்ளன. பல விலங்குகள் வெள்ளத்தில் தப்பி, வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளன. இதுவரை 50க்கும் மேற்பட்ட விலங்குகள் உயிரிழந்துள்ளன. காண்டாமிருகங்கள் கிடைத்த மேடான இடங்களில் கூட்டம், கூட்டமாக தஞ்சமடைந்துள்ளன.
வீட்டிற்குள் புகுந்த புலி
வெள்ளத்தில் தப்பிய புலி ஒன்று, தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் புகுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லை. வீட்டின் உரிமையாளர்கள் திரும்பி வந்து போது, வீட்டிற்குள் புலியின் உறுமல் சத்தம் கேட்டுள்ளது.
|
பத்திரமாக மீட்பு
சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர், வெளியில் இருந்த இடைவெளி வழியாக பார்த்த போது, மெத்தை மீது புலி படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். புலி இருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து, தகவலறிந்து வந்த வனத்துறையினர், மயக்க ஊசி செலுத்தி புலியை பூங்காவிற்கு கொண்டுச் சென்றனர்.
|
தண்ணீரில் தத்தளிப்பு
மான், காட்டெருமை உள்ளிட்டவையும் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன. யானை ஒன்று நேற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தது. வீட்டில் வளர்க்கும் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தில் 31 காண்டா மிருகம், புலி உள்பட 360 விலங்குகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.