மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த மிஸ்டர்.ஆர்.. மாவோயிஸ்ட் கடிதத்தில் என்ன இருந்தது.. முழு விபரம்
பிரதமர் மோடிக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் கடிதம் குறித்து முழு விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
டெல்லி: பிரதமர் மோடிக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் கடிதம் குறித்து முழு விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
நேற்று கைப்பற்றப்பட்ட கடிதத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பாணியில் பிரதமர் நரேந்திர மோடியை கொல்வதற்கு மாவோயிஸ்டுகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.
புனே போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தகவல் வெளியானது. அந்த கடிதத்தில் இருக்கும் முழு விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
எந்த கடிதம்
அந்த லெட்டர் சரியாக ஏப்ரல் 18ம் தேதி 2017ல் எழுதப்பட்டுள்ளது. பிரகாஷ் என்ற மாவோயிஸ்ட் குழுவை சேர்ந்த நபருக்கு இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் ஆர் என்ற ரகசிய குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடிதத்தின் முடிவில் மிஸ்டர்.ஆர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது யார் என்று தெரியாமல் போலீஸ் முதலில் குழம்பி இருக்கிறது.
மிகவும் மோசமான நிலை
அந்த கொலைமிரட்டல் கடிதத்தில், இந்து பாசிசத்தை வேரறுக்கவே இந்த கொலை செய்ய வேண்டும். எங்களுடைய கொள்கைக்கு ஏற்றவர்களுடன் சேர்ந்து நாங்கள் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். சில கட்சிகளும் எங்களுக்கு உதவி வருகிறார்கள். பீகார், மேற்கு வங்கத்தில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம். பாஜக 15 மாநிலங்களை பிடித்துவிட்டது. நாம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
பணம் தேவை
மேலும், இந்த கொலையை செய்ய 8 கோடி வரை தேவைப்படும். அமெரிக்காவில் இருந்து எம்4 ரக துப்பாக்கிகளை வாங்க வேண்டும். நான்கு லட்சம் தோட்டாக்கள் வாங்க வேண்டும். இதற்காக பயிற்சி எடுக்கவும் ரகசிய இடம் வேண்டும். இதற்கான பணத்தை நாம் உடனடியாக திரட்ட வேண்டும் என்று அந்த கடிதத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பட்னாவிஸ்
அதேபோல் தேவேந்திர பட்னாவிஸுக்கு இந்த கடிதத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 4 வருடத்தில் மட்டும் 3000க்கும் அதிகமான மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்த கடிதத்தில் கோபமாக பேசியுள்ளனர். இதற்கு பழி வாங்கும் விதமாக, விரைவில் கொலையை அரங்கேற்ற வேண்டும் என்று அந்த கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.
யார் அந்த ஆர்
டெல்லியை சேர்ந்த ரோனா வில்சன் என்றவர் வீட்டில்தான் இந்த கடிதம் கைப்பற்றப்பட்டது. ரோனா வில்சன் உட்பட நான்கு பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த கடிதத்தில் இருந்த ஆர் என்ற நபர் இவர்தான் என்று கூறப்படுகிறது. இவர் தடை செய்யப்பட்ட, மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தார். இவர் இயக்கத்தில் உள்ள நபர்கள் நான்கு பேர் வெவ்வேறு குற்றங்களை செய்துள்ளனர்.