எதிர்க்கட்சிகள் லெப்ட்டில் போனால்.. வலது பக்கம் அட்டாக் செய்யும் மோடி.. பாஜகவின் செம பிரச்சாரம்!
டெல்லி: பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தேர்தல் பிரச்சாரத்திலும், இந்திய ராணுவம், தேசத்தின் பாதுகாப்பு, தீவிரவாதிகள் பிரச்சனை, காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களை வைத்தே பேசுவார். இப்போது மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் இதே யுக்தியை பின்பற்றுகிறார். இவரது இந்த யுக்தியில் சிக்கி எல்லா எதிர்கட்சிகளுமே சின்னாபின்னமாகி வருகின்றன.
மோடி மஸ்தான் வேலை என்று சொல்வார்களே அந்த வேலை தான் ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்திலும் பிரதமர் மோடி செய்கிறார். மாயாஜாலங்களை நிகழ்த்தி எதிர்க்கட்சிகளை தனது தேர்தல் யுக்திவலையில் சிக்க வைத்து வென்று வருகிறார்.
இதனால் அவரது ஆட்சி பலவீனங்களை பற்றி பேச வேண்டிய எதிர்க்கட்சிகள் மோடியின் பேச்சுக்கு பதில் அளிக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகுகின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சி தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் சிக்கி தவித்து வாக்கு வங்கியை பெரிய அளவில் இழந்து வருகிறது. எப்படி இந்த மாயாஜாலங்களை மோடி நிகழ்த்துகிறார் என்பதை இப்போது பார்ப்போம்.
நம்பவைத்தார்
பிரதமர் மோடி 2014 பிரச்சாரத்தில் ஈடுபடும் முன்பே மிகச்சரியாக செயல்பட்டு குஜராத்தையும் தன்னையும் பற்றியே எல்லோரையும் பேச வைத்தார். அப்போது நாட்டில் ஊழல் அற்ற, நேர்மையான வளர்ச்சி, அனைவருக்குமான வளர்ச்சி என்று பாஜகவின் கோஷங்கள் முன்னிறுத்தப்பட்டு இருந்தது. இதற்கு தான் தான் சரியான நபர் என்று எல்லோரது நம்பிக்கையையும் பெற்றார். மோடி வந்தால் எல்லாம் மாறும் என்ற நம்பிக்கையால் அன்று அவர் வெற்றி பெற்றார். அதற்காக பிரதமர் மோடியின் உழைப்பு நிச்சயம் அசாத்தியமானது.
ஜிஎஸ்டி வரி
பிரதமர் மோடி 2016 நவம்பரில் டிமானிஸ்டேசன் கொண்டு வந்தார். இதன் மூலம் நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்க முடியும் என்று மக்களை நம்ப வைத்தார். ஏனெனில் இதற்கு முன்இந்தியாவில் அப்படி நடந்தது இல்லை. இதன் பிறகு 2017ல் ஜிஎஸ்டி கொண்டு வந்தார் இதன் மூலம் ஒரே வரி காரணமாக தேசத்தின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று பேசி பிரதமர் மோடி மக்களை நம்ப வைத்தார். அதேநேரம் தேச பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன், தீவிரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை என்ற விஷயத்தில் அதிக ஆர்வம் செலுத்தினார்.
உரி தாக்குதல்
குறிப்பாக பதன்கோட் மற்றும் உரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் மக்கள் மத்தியில் பிரதமர் மோடிக்கு நல்ல பெயரை பெற்று வந்தது. உரி தாக்குதலுக்கு பதிலடி, பதன்கோட் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த மோடி என்ற ரீதியிலேயே மக்களை பேசும் அளவுக்கு வைத்தார். தேச பாதுகாப்பு விஷயத்தில் எதிர்கட்சிகள் சரியாக இல்லை என்று மோடி கடுமையாக சாடினார்.
காங். திணறல்
இந்நிலையில் 2019 தேர்தல் வந்த போது தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சிகளை தவிடு பொடி ஆக்கும் வகையில் தேச பக்தி, தேசிய பாதுகாப்பு விஷயங்களை மோடி அதிகமாக பேசினார். அவரது பேச்சுக்கு பதில் அளிக்க முடியால் எதிர்க்கட்சிகள் திணறின. மோடி இருந்தால் தீவிரவாதிகளால் வாலாட்ட முடியாது என்ற நம்பிக்கையை அவர் உருவாக்கினார்.
ஜம்மு காஷ்மீர்
காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளால் ராமர் கோயில் விவகாரத்தில் ஒற்றை நிலைப்பாட்டை எடுக்கவில்லை. ஆனால் பாஜக நாங்கள் வந்தால் ராமர் கோயில் அயோத்தியில் கட்டுவோம் என உறுதி அளித்தது. இதேபோல் ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என அறிவித்தது. ஆனால் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. இப்படி தேச பாதுகாப்பு விஷயங்களில் காங்கிரஸ் கட்சியை மடக்கிய பிரதமர் மோடியின் பாஜக, வடமாநிலங்களில் மிகப்பெரிய வெற்றியை பாஜக பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.
இப்போது சிக்கல்
இந்நிலையில் சொன்னது போலவே காஷ்மீர் விஷயத்தில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தார் பிரதமர் மோடி. அப்போது காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதேபோல் திமுக உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதேபோல் முத்தலாக் மசோதாவையும் காங்கிரஸ் எதிர்த்தது. இந்த இரண்டையும் வைத்து பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
தைரியம் உள்ளதா
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டு வருவோம் என்று அறிவிக்கும் தைரியம் எதிர்க்கட்சிகளுக்கு உள்ளதா என்று பிரதமர் மோடி அண்மையில் கேள்வி எழுப்பினார். இதேபோல் முத்தலாக்கை மீண்டும் கொண்டு வருவோம் என்று அறிவிக்க தயாரா என்றும் கேள்வி எழுப்பி எதிர்க்கட்சிகளை தாக்கி உள்ளார். இதேபோல் ஹரியானாவுக்கு வரவேண்டிய தண்ணீர் பாகிஸ்தானுக்கு போய்கொண்டிருந்தது. அதை ஹரியானா மாநிலத்திற்கே கொண்டு வந்தது நாங்கள் தான் ஹரியானா மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பேசியிருக்கிறார்.
சிக்கலில் காங்கிரஸ்
பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் கட்சியின் முந்தைய பேச்சுக்களை தேச பாதுகாப்புடன் ஒப்பிட்டு பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த பிரச்சார யுக்தியில் இருந்து சிக்கி உள்ள காங்கிரஸ் அதற்கு சரியான பதிலடியை இதுவரை அளிக்கவில்லை என்பதே உண்மை. அதேநேரம் பொருளாதார பிரச்சனை, ஜிஎஸ்டி பிரச்சனை, வறுமை, வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றை மட்டுமே காங்கிரஸ் பேசிவருகிறது. இது பெரிய அளவில் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை கைகொடுக்கவில்லை என்பதும் அந்த கட்சிக்கு கசப்பான உண்மை. இந்தமுறை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் கைகொடுக்குமா என்பதை பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும்.