ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: பிப்.3ல் இறுதி வாதம்!
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகளை மறுமதிப்பீடு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜான் மைக்கேல், நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
ஜெயலலிதாவிடம் கைப்பற்றப்பட்ட தங்கம், வைர நகைகள் சென்னை கடற்கரை சாலையில் உள்ள ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருந்தது. திடீரென, பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் கடந்த 6ஆம் தேதி திடீரென சென்னை வந்து ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து, வழக்கில் தொடர்புடைய நகைகள் அனைத்தும் பெங்களூருக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இறுதி வாதத்தை அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் பிப்ரவரி 3ஆம் தேதி தொடங்க வேண்டும் என்று நீதிபதி மைக்கேல் டி.குமார் உத்தரவிட்டார்.
பவானி சிங் வாதத்தையடுத்து, ஜெயலலிதா தரப்பை சேர்ந்தவர்களின் வாதம் தொடங்கும். இந்த வழக்கில் இறுதி வாதம் தொடங்க இருப்பதால் வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.