ஒரு நாள் ஜனாதிபதி ஆவாய்.. ஸ்மிருதி இராணிக்கு ஜோசியம் சொன்ன ராஜஸ்தான் ஜோதிடர்!
டெல்லி: மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, ஒரு நாள் இந்தியாவின் ஜனாதிபதியாக உயர்வீர்கள் என்று ஜோசியம் கூறியுள்ளார் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு ஜோதிடர்.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் உள்ள கரோய் என்ற கிராமத்திற்குத் தனது கணவர் ஜூபின் இராணியுடன் சென்றிருந்தார் ஸ்மிருதி. அங்கு பண்டிட் நாதுலால் வியாஸ் என்ற ஜோதிடரை அவர் சந்தித்தார். அவரிடம் தனது எதிர்காலம் குரித்து பல்வேறு கேள்விகளைக் கேட்டார்.
இதையடுத்து இராணியின் ஜாகத்தைப் பார்த்து அவருக்குப் பல்வேறு கணிப்புகளைக் கூறினார் வியாஸ். அதில் முக்கியமானது, ஒரு நாள் இந்தியாவின் ஜனாதிபதியாக ஸ்மிருதி உயர்வார் என்பது.
இதே வியாஸ்தான் முன்பும் கூட, ஸ்மிருதி அரசியலில் உயரிய இடத்திற்கு வருவார், அமைச்சர் ஆவார் என்று ஆரூடம் கூறியவராம். எனவே வியாஸ் மீது ஸ்மிருதிக்கு தனி மரியாதை உண்டு.
தற்போது வியாஸை சந்தித்த ஸ்மிருதி, நான்கு மணி நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தார். தனது அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் எதிர்காலம் குறித்து பல கேள்விகளை, சந்தேகங்களைக் கேட்டாராம் ஸ்மிருதி. மேலும் இதற்கு முன்பு தனக்கு சரியான முறையில் கணிப்புகளைச் சொன்னதற்காக நன்றியும் கூறிக் கொண்டாராம் ஸ்மிருதி.
இந்த சந்திப்பு குறித்து ஸ்மிருதியிடம் டிவி செய்தியாளர்கள் சிலர் கேட்டபோது, இன்று உங்களுக்கு நல்ல டிஆர்பி கிடைக்கும் என நம்புகிறேன். உங்களுக்கு உதவியதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சிரித்தபடி கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், தனிப்பட்ட எனது வாழ்க்கை குறித்து மீடியாக்கள் கவலைப்படத் தேவையில்லை. அதேசமயம், உங்களது தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து என்னை வைத்திருக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன் என்றார் இராணி.
ஆனால் இதே ஜோதிடர் வியாஸ்தான் முன்பு இராணிக்கு சிறந்த எதிர்காலம் இல்லை என்றும் கணித்தவர் ஆவார். இருப்பினும் பின்னர் இவரே இராணியை அழைத்து நல்ல எதிர்காலம் உள்ளது, மத்தியில் அமைச்சர் ஆவாய் என்றும் வாழ்த்தினார்.
நேற்றைய சந்திப்பின்போது இன்னும் ஒரு படி மேலே போய், இந்தியாவின் ஜனாதிபதியாக ஒரு நாள் வருவாய் என்று வாழ்த்தினாராம் வியாஸ்.
இராணியின் இந்த ஜோதிடர் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜகவின் கூட்டாளியான சிவசேனாவின் சஞ்சய் ராத் கூறுகையில், ஜோதிடம் என்பது சாஸ்திரம். யார் வேண்டுமானாலும் அதை நம்பலாம், பின்பற்றலாம். அதில் தவறு ஏதும் இல்லை. அதில் குறை கண்டுபிடிக்கவும் தேவையில்லை என்றார்.