நோயாளி ஜாதகம் பார்த்து சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை... பலன் கிடைக்குது.. டாக்டர்கள் குஷி!
ராஜஸ்தானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நோயாளிகளின் ஜாகத்தை வைத்து நோய் தாக்கத்தை கணித்து சிகிச்சை அளிக்கப்படும் வினோதம் நடக்கிறது.
ஜெய்ப்பூரிலுள்ள விஷாலி நகரில் யுனிக் சங்கீதா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்னர் ஜாதகம் பார்க்கப்படுகிறது. ஜோதிட நிபுணரை வைத்து நோயாளிக்கு ஏற்பட்டுள்ள வியாதியை அலசி ஆராய்கின்றனர்.
அதனையும், ஆய்வுக் கூடங்களில் செய்யப்படும் சோதனை முடிவுகளையும் வைத்து நோயாளிக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இதுகுறித்து அங்கு பணியாற்றும் மருத்துவர் கூறுகையில்," தினசரி 25 முதல் 30 நோயாளிகள் வருகின்றனர்.
அவர்களுக்கு சிகிச்சை தொடங்குவதற்கு முன்னர் எங்களது மருத்துவமனையில் பணியாற்றும் பண்டிட் அகிலேஷ் சர்மான என்ற ஜோதிட நிபுணரிடம் நோயாளியின் பிறந்த தேதி, நேரம் உள்ளிட்டவற்றை வைத்து நோயாளியின் நோய் தாக்கத்தை அறிந்து கொள்கிறோம்..
ஜாதகம் பார்த்து நோயின் தன்மை ஆய்வு செய்யப்பட்ட பின்னர், எங்களது வழக்கமான ஆய்வு கூட முடிவுகளையும் ஒப்பிட்டு பார்த்து உயர் சிகிச்சை அளிக்கிறோம். இரண்டுமே ஒத்துப் போகிறது.
இதற்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. நோயாளிகளும் சிகிச்சையின் மூலமாக நலம் பெற்று மன நிறைவுடன் செல்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
இந்த மருத்துவமனையின் வித்தியாசமான சிகிச்சை அணுகுமுறையில் நோயாளிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இந்த மருத்துவமனையில் தற்போது 22 ஊழியர்களும், 5 மருத்துவர்களும் பணியாற்றுகின்றனர்.
தமிழ்நாட்டிலும் சித்த மருத்துவர்கள் பலர் ஜோதிட சாஸ்திரத்திலும் கை தேர்ந்தவர்களாக இருப்பதுடன், நோயாளியின் ஜாதகத்தையும் பார்த்து மருத்து கொடுத்து சிகிச்சை தரும் நடைமுறையை பல்லாண்டு காலமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.