இந்தியாவில் முதன் முறையாக.. 180 கி.மீ வேகத்தில் செல்லும் 'டால்கோ ரயில்'
டெல்லி: இந்தியாவிலேயே முதன் முறையாக மணிக்கு 180 கி.மீ செல்லும் டால்கோ ரயில், 84 கி.மீ. தொலைவை வெறும் 38 நிமிடங்களில் கடந்து அதன் முழு இலக்கை எட்டியது. இந்த ரயில் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்பெயின் நாட்டில் தயாரிக்கப்பட்ட டால்கோ விரைவு ரயிலின் முதற்கட்ட சோதனை ஓட்டம் கடந்த மாதம் பரேலி - மொரதாபாத் இடையே நடந்தது. அப்போது அந்த ரயில் 80 முதல் 115 கி.மீ வேகத்தில் இயக்கி சோதிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 9ம் தேதி 2ம்கட்ட சோதனை ஓட்டம் மதுரா - பல்வால் இடையே நடந்தது. 120 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 84 கி.மீ தூரத்தை 53 நிமிடங்களில் ரயில் கடந்தது.
இந்நிலையில் 3ம் கட்ட சோதனை, நேற்று அதன் முழு வேகமான மணிக்கு 180 கி.மீ வேகம் வரை இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது மதுரா-பால்வால் இடையே உள்ள 84 கி.மீ. தொலைவை வெறும் 38 நிமிடங்களில் டால்கோ கடந்து சாதனை படைத்தது. இந்த தொலைவை கடக்க வழக்கமாக 90 நிமிடங்கள் ஆகும். இதன் மூலம் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த சோதனை ஓட்டத்தின் போது 9 பெட்டிகள் தால்கோ ரயிலில் இணைக்கப்பட்டிருந்தன. இந்த ரயில் பெட்டிகள் குறைந்த எடை கொண்டதாகவும், வளைவுகளின் போது வேகத்தை குறைக்காமல் திருப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஸ்பெயின் நாட்டின் மூத்த அதிகாரிகள், மத்திய ரயில்வே துறை அதிகாரிகளும் சோதனை ஓட்டத்தின் போது ரயிலில் பயணம் செய்தனர்.
இதன் அடுத்த கட்ட சோதனை டெல்லி - மும்பை இடையிலான 1,400 கிமீ தூரத்துக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.