யாகூப் மேமன் தூக்கு... பிறந்த நாளே இறந்த நாளான சோகம்... விடிய விடிய பரபரப்பை ஏற்படுத்திய நிமிடங்கள்
மும்பை: மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நிதி உதவி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட யாகூப் மேமனுக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது. சமூக வலைத்தளங்களில் பல்வேறு சர்ச்சைகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது இந்த தூக்கு தண்டனை. பிறந்தநாளிலேயே தன் மகன் தூக்கிலிப்படுவான் என்று 53 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் யாகூப் பிறந்த போது அவரது தாயார் நினைத்திருக்க மாட்டார்.
தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு கூறப்படும் காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் என்றாலும் அதை இன்றே நிறைவேற்ற வேண்டியது ஏன் என்ற கேள்விதான் பலரின் மனதிலும் எழுகிறது. தூக்கு தண்டனைக்கு எதிரான மனநிலையை கொண்டிருந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதிச்சடங்கு நிறைவேற்றப்பட உள்ள இந்த நேரத்தில் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டது ஏன் என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது.
|
பலிகொடுக்கப்பட்டாரா யாகூப் மேமன்
மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பல குற்றவாளிகள் இன்னும் வெளியில் சுற்றிக்கொண்டிருக்க, தானாக வந்து சரணடைந்த ஒருவனை பலி கொடுத்து குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்து விட்டோம் என்று மார்தட்டிக்கொள்கிறதா மத்திய அரசு என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள். அப்போ மற்ற தீவிரவாதிகளுக்கு என்ன தண்டனை என்றும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பிறந்தநாளில் சோகம்
தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமனுக்கு இன்று 53வது பிறந்த நாள் என்பதுதான் சோகம். இதே மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நேற்றுதான் தன்னுடைய 56வது பிறந்தநாளை புனேவில் உள்ள எரவாடா சிறையில் கொண்டாடியுள்ளார்.
மும்பை குண்டுவெடிப்பு
1993 மார்ச் 12ம் தேதி பிற்பகலில் மும்பை நகரில் 13 இடங்களில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 257 பேர் பலியாயினர். 700க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
குற்றவாளிகள் யார்? யார்?
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த தொடர் குண்டுவெடிப்பில் தலைமறைவாக உள்ள டைகர் மேமனின் தம்பி யாகூப். யாகூப்பின் பெற்றோர், அவரது 3 சகோதரர்கள், உறவுக்கார பெண் ஆகியோர் இந்த வழக்கில் விசாரணையை எதிர்கொண்டனர். இதில் யாகூபின் மனைவி, தாயார், சகோதரர் விடுவிக்கப்பட்டனர். பிற சகோதரர்களான எசா, யூசுப், உறவுக்கார பெண் ரூபினா ஆகியோர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டனர்.
மரணதண்டனை
இந்த குண்டுவெடிப்பு சதியில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு யாகூப் நிதி உதவி செய்தார் என விசாரணை நீதிமன்றம் தெரிவித்தது. 2007 ஆண்டு ஜூலை 27ம் தேதி தடா நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்தது. தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஏ.சனாப், 2015 ஏப்ரல் 29-ம் தேதி யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதிப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார்.
தூக்கு நிறைவேற்றம்
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய யாகூப் மேமனுக்கு தடா நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து, நாக்பூர் மத்திய சிறையில் ஜூலை 30ம் தேதி (இன்று) தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மூன்று நீதிபதிகள் விசாரணை
தூக்கு தண்டனைக்கு தடை கோரி, யாகூப் மேமன் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனில் தவே, குரியன் ஜோசப் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் இரண்டு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பு வழங்கியதால் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
அர்டர்னி ஜெனரல்
இம்மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்ல சி பந்த், அமிதவ ராய் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜரானார். அவர், 'யாகூப் மேமனின் மறுசீராய்வு மனு மீதான விசாரணையில் நடைமுறை மீறப்பட்டுள்ளதாக நீதிபதி குரியன் ஜோசப் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த அமர்வு பிறப்பித்த உத்தரவு செல்லாது என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மறுசீராய்வு மனு தள்ளுபடி
உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் மூன்று பேர் அடங்கிய அமர்வு, யாகூப் மேமனின் மறுசீராய்வு மனுவை விசாரித்து தள்ளுபடி செய்தது. மறுசீராய்வு மனு மீது உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை என்று தீர்ப்பளித்தனர்.
கருணை மனுக்கள்
மேமன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ்.துளசி, 'யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, குடியரசுத் தலைவரிடமும், மகாராஷ்டிர ஆளுநரிடமும் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வரும் வரை தூக்கு தண்டனையை அமல்படுத்த முடியாது' என்று வாதிட்டார்.
நிராகரித்த நீதிபதிகள்
அதற்கு நீதிபதிகள், 'கருணை மனுக்கள் நிர்வாக அதிகாரத்தின் கீழ் வருபவை. அதற்கும் வழக்குக்கும் தொடர்பில்லை' என்று கூறி அவரது வாதத்தை நிராகரித்தனர். தூக்கு தண்டனை குறித்த உத்தரவு கடந்த 13ம் தேதி தான் யாகூப் மேமனிடம் வழங்கப்பட்டது. போதிய கால அவகாசம் தரப்படவில்லை என்ற வாதத்தையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.
தடை விதிக்க மறுப்பு
சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அனைத்து வாய்ப்புகளையும் யாகூப் மேமன் முழுமையாக பயன்படுத்திவிட்டார். மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு, தூக்கு தண்டனையை நிறைவேற்றும் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தனர்.
மத்திய அரசு பரிந்துரை
இந்த தீர்ப்பு வெளிவந்த சிறிது நேரத்தில், மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், கருணை மனுவை நிராகரித்து உத்தரவு பிறப்பித்தார். குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட இரண்டாவது கருணை மனு மீது நேற்றிரவு வரை எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இறுதியில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல் கிடைத்ததும், யாகூப் மேமன் கருணை மனுவை நிராகரிக்க மத்திய அரசு பரிந்துரை அளித்தது.
குடியரசுத்தலைவர் நிராகரிப்பு
யாகூப் அனுப்பிய கருணை மனுவை மத்திய அரசு நிராகரித்த முடிவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்ததார். இதன் தொடர்ச்சியாக, யாகூப் மேமனின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.
14 நாட்கள் அவகாசம்
கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்த நிலையில், மேலும் ஒரு கடைசி முயற்சியாக, மேமனின் வழக்கறிஞர்கள் புதன்கிழமை நள்ளிரவில் உச்ச நீதிமன்றத்தை நாடினர். யாகூப் மேமனுக்கு கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற, உச்ச நீதிமன்ற நெறிமுறைகளின்படி, அவருக்கு 14 நாட்களாவது அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
5 மணிக்கு உத்தரவு
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் உத்தரவு பிறப்பித்தது. நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அதே 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, யாகூப் மேமனின் கடைசி மனுவையும் தள்ளுபடி செய்தனர்.
மனு தள்ளுபடி
ஒரு தூக்கு தண்டனை கைதியின் முதலாவது கருணை மனு நிராகரிக்கப்படும்போதுதான் இந்தக் கோரிக்கை பொருந்தும் என்று அடிப்படையில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, மேமனின் கடைசி முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது.
144 தடை உத்தரவு
மேமன் தூக்கிலிடப்படுவதற்கு முன்னராக அவரை உறவினர்கள் சந்தித்து பேச அனுமதிக்கப்பட்டனர். அவருக்கு புத்தாடைகள் கொடுக்கப்பட்டன. யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டுள்ள நிலையில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க நாக்பூர் சிறையை சுற்றி 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.