தாவூத் இப்ராஹிம் உறவினர் திருமணத்திற்குச் சென்ற அமைச்சர்.. சர்ச்சையில் சிக்கிய பாஜக
இந்திய அரசால் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உறவினர் இல்ல திருமணத்தில் கலந்துகொண்ட பாஜக அமைச்சரால் மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை: இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் மகாராஷ்டிர மாநில அமைச்சர் கிரிஷ் மகாஜன் மற்றும் பாஜக பிரமுகர்கள் கலந்து கொண்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்ற 19ம் தேதி நாசிக் நகரத்தில், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மனைவியின் சகோதரி மகள் திருமணம் நடந்தது. இதில் பல்வேறு தரப்பில் இருந்தும் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், மகாராஷ்டிர மாநில அமைச்சர் கிரிஷ் மகாஜன், பாஜக எம்.எல்.ஏக்கள் நாசிக் நகர மேயர், துணை மேயர்,பாஜக கவுன்சிலர்கள், துணை போலீஸ் கமிஷனர் மற்றும் 9 பாஜக ஆதரவு இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக அமைச்சர் மகாஜன், " திருமணத்தில் கலந்து கொண்டது உண்மை. ஆனால் தாவூத் உறவினர் வீட்டு திருமணம் என தெரியாது. மணமகன், உள்ளூர் முஸ்லிம் சமுதாய தலைவர் காதீப் என்பவரின் மகன். காதீப் அழைப்பின் பேரில் திருமணத்திற்கு சென்றேன்."
என்று கூறியுள்ளார்.
தாவூத் உறவினர் இல்ல திருமணத்துக்கு மாநில அமைச்சரே நேரில் சென்றுள்ளது, திரைமறைவில் பாஜகவினருக்கும் நிழல் உலகத்துக்கும் உள்ள தொடர்பை வெளிச்சம் போட்டுகாட்டியுள்ளது என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் பரவியுள்ளன.