இந்தியா-பாகிஸ்தான் வாகா எல்லை போல மாறியுள்ள ஒசூர் எல்லை.. கெடுபிடி தாங்க முடியவில்லை
பெங்களூர்: தமிழக-கர்நாடக எல்லை நகரங்களான ஒசூர்-அத்திபெலே ஏதோ இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகா போல மாற்றப்பட்டுள்ளது. கன்னட போராட்டக்காரர்கள் தமிழக எல்லைக்குள் நுழைந்துவிட கூடாது என்பதற்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எல்லையை கடக்க மாணவர்கள், பொதுமக்கள், பணிக்கு செல்வோர் கடும் சிரமப்படுகிறார்கள்.
ஒசூர் நகரம் கர்நாடகாவின் ஒரு அங்கம் என்பது போல இரு மாநிலங்கள் நடுவே நிமிடத்திற்கு ஒரு பஸ் இயக்கப்பட்டு வந்தது. அதேபோலத்தான் ஒசூர்வாசிகளும், பெங்களூர் தங்கள் நகரத்தின் ஒரு அங்கம் என்பதை போல வாழ்ந்து வந்தனர்.
பெங்களூரில் வேலை பார்க்கும் பலரும், ஒசூரில் வீடுகளை வாங்கியோ அல்லது வாடகைக்கோ தங்கிவிடுவது வழக்கம். எலக்ட்ரானிக் சிட்டி போன்ற ஐடி நிறுவனங்கள் குவிந்த பகுதிக்கு பெங்களூர் நகருக்குள் இருந்து பயணித்து வருவதை விட ஒசூரிலிருந்து விரைவில் வந்துவிடலாம். டிராபிக் நெரிசல் கிடையாது என்பது காரணம்.
பல்வேறு தேவைகள்
அதேபோல மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகளுக்காக ஒசூர் மக்கள் அத்திபெலே, பொம்மசந்திரா, எலக்ட்ரானிக் சிட்டி போன்ற பெங்களூரின் புறநகர் பகுதிகளுக்கு தினசரி செல்வது வழக்கம். இதனால் இரு மாநில மக்களும் வித்தியாசமின்றி பழகி வந்தனர்.
எல்லை சீல்
காவிரி போராட்டத்தை அத்திபெலே எல்லைக்கு கன்னட அமைப்பினர் கொண்டு சென்றதன் விளைவாக, எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழக பஸ்கள் எல்லையை தாண்டிவருவதில்லை, போலவே, கர்நாடக பஸ்கள் இந்த பக்கத்து எல்லையை தாண்டுவதில்லை. எல்லையை கடந்து அடுத்த பஸ்சில் பயணிக்க பயணிகள் 2 கி.மீ பயணிக்க வேண்டியுள்ளது.
போலீஸ் குவிப்பு
இரு மாநில மக்களிடையே போராட்டக்காரர்கள் மோதலை ஏற்படுத்திவிடாமல் இருக்க ரிசர்வ் போலீஸ் உட்பட நூற்றுக்கணக்கான போலீசாரை கர்நாடகா எல்லையில் குவித்துள்ளது. தமிழக எல்லைக்குள் தமிழக போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்தியா-பாகிஸ்தான் வாகா எல்லை போல ஒசூர் எல்லை காட்சியளிக்கிறது.
மாணவர்கள் பரிதாபம்
ஒசூரிலிருந்து ஆக்போர்ட்டு கல்லூரி, எஸ்.வி.ஆர் கல்லூரி போன்றவற்றுக்கு செல்லும் மாணாக்கர்கள் தினமும் 2 கி.மீ நடக்க வேண்டிய கட்டாயம். முன்பு அரை மணி நேரத்தில் கல்லூரியை அடைந்த மாணாக்கர்களுக்கு இப்போது 1 மணி நேரத்திற்கு மேலாகிறது. பெங்களூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு உயர் சிகிச்சை பெற செல்லும் நோயாளிகள் பிரச்சினை சொல்லி மாளாது. ஆம்புலன்சுகளுக்கு மட்டுமே விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தேசத்தின் சொத்தான நதிநீரை தங்களுக்கு மட்டுமே உரியது என சொல்லும் கோஷம், மக்களுக்கு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது என்பதற்கு இது ஒரு உதாரணம்.