இலவச கண் சிகிச்சை முகாமில் ஆபரேஷன் செய்து கொண்ட 60 பேர் பார்வை இழப்பு - பஞ்சாபில் அதிர்ச்சி!
அமிர்தசரஸ் : பஞ்சாப் மாநிலத்தில் இலவச கண் சிகிச்சை முகாமில் கண் புரை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நோயாளிகள் பார்க்கும் திறனை இழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
கடந்த மாதம் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் குமன் கிராமத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று பொது மக்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. இந்த முகாமில் 62 நோயாளிகளுக்கு கண் புரை அறுவைச் சிகிச்சையும் செய்யப் பட்டது. இவர்களில் 15 பேர் அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள், தங்களது பார்க்கும் சக்தியை இழந்து விட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளனர். அறுவைச் சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்ட சுகாதாரமற்ற கருவிகளே இதற்குக் காரணம் என பாதிக்கப் பட்டவர்கள் புகார் கூறுகின்றனர்.
பார்வை இழந்தவர்கள் அனைவருக்கும் மீண்டும் பார்வையை கொண்டு வரும் முயற்சிகளில் இறங்கி இருப்பதாக பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நோயாளிகள் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த விசயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த அமிர்தசரஸ் நகரின் துணைகமிஷனர் ரவி பகவத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சமீபத்தில் சட்டீஸ்கரில் நடத்தப்பட்ட முகாமில் கலந்து கொண்டு குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட பெண்கள் பதினான்கு பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு கண் புரை அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் 60 பேர் பார்வை இழந்திருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.