ம.பி.யில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து- 87 பேர் பலி! பக்கத்து கட்டிட வெடிபொருட்களும் வெடித்தன!!
போபால்: மத்திய பிரதேசத்தில் இன்று காலை பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையல் காஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 87 பேர் கருகி உயிரிழந்தனர். சிலிண்டர் வெடித்த ஹோட்டல் அருகே உள்ள கட்டிடத்தில் பதுக்கிவைக்கப்பட்ட வெடிபொருட்களும் வெடித்ததால் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஜபுவா மாவட்டத்தில் உள்ள பெட்லவாத் என்ற இடத்தில் பேருந்து நிலையம் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பிசியான இடமாகும்.
#FirstVisuals from Jhabua (MP), where a LPG cylinder blast in a hotel took place. 20 people reportedly dead. pic.twitter.com/SYRobKLA5U
— ANI (@ANI_news) September 12, 2015
இன்று காலை 9 மணி அளவில் பேருந்து நிலைய வளாகத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏராளமான பயணிகளும், பொதுமக்களும் உணவருந்திக் கொண்டிருந்தனர். மிகவும் ஆள் நடமாட்டமுள்ள தெரு என்பதால் ஹோட்டலுக்கு முன்பாக ஏராளமான இரண்டு சக்கர வாகனங்கள், கார்கள் ஆகியவையும் நிறுத்தப்பட்டிருந்தன.
மேலும் தெருவிலும் சரக்கு வர்த்தகர்கள், சுமை பணியாளர்கள் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த ஹோட்டலில் இருந்து திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதில் அந்த ஹோட்டல் முழுவதும் வெடித்து சிதறி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து அந்த பகுதியே பயங்கர போர்க்களம் போல் ஆனது. உடனடியாக அங்கிருந்த பொதுமக்களும், பயணிகளும் அலறி அடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்பகுதி முழுவதும் அலறல் சத்தமும், வலியுடன் கூடிய அழுகை சத்தமும் நிரம்பியது.
சிறிது நேரத்திற்கு அங்கு என்ன நடந்தது என்று தெரியாத அளவுக்கு புகை மூட்டம் சூழ்ந்திருந்தது. மேலும் ஹோட்டலுக்கு முன்புறம் இருந்த இரண்டு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவையும் தீயில் கருகின.உடனடியாக தகவல் அறிந்த தீ அணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு வந்து பார்த்த போது ஹோட்டலில் பயங்கரமாக தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. மேலும் அங்கு ஏற்பட்ட விபத்தில் அருகில் இருந்த 3 மாடி கட்டிடம் ஒன்றும் இடிந்து தரைமட்டமானதாக கூறப்படுகிறது. அந்த கட்டிடத்தில் வெடிபொருட்கள் இருந்ததாகவும் பின்னர் தெரியவந்தது.
மிகவும் நெரிசல் மிக்க பகுதி என்பதால் அப்பகுதியில் உள்ள ஏராளமான கட்டிடங்களும் பாதிக்கப்பட்டன. மேலும் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் பாதிக்கப்பட்டன.
இந்த விபத்தில் ஹோட்டலில் உணவருந்திக் கொண்டிருந்த சுமார் 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். இந்த தீ விபத்தில் இதுவரை மொத்தம் 87 பேர் பலியாகி உள்ளனர்.
இச்சம்பவத்துக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தமது ட்விட்டரில் பிரதமர் மோடி, காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமாக பிரார்த்திப்பதாகவும் நிலைமை உன்னிப்பாக மத்திய பிரதேச அரசு கவனித்துவருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளதோடு, பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூபாய் 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ஆயிரமும் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் பாபுலால் கவுர் கூறுகையில், சிலிண்டர் வெடித்ததாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த கட்டிடத்தில் வெடிப்பொருட்கள் இருந்ததாகவும் அதன் காரணமாக உயிரிழப்பு அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.