வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது? 25–ந் தேதி பிரதமர் மோடி அறிவிப்பு?
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பை வாஜ்பாய் பிறந்தநாளான வரும் 25-ந் தேதி பிரதமர் மோடி அறிவிப்பார் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரதிய ஜனதா கட்சியின் முதலாவது பிரதமர் வாஜ்பாய். 1998-ம் ஆண்டில் இருந்து 2004-ம் ஆண்டு வரை ஆறு ஆண்டு காலம் பிரதமராக இருந்தார்.
தற்போது உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ளார். வாஜ்பாய்க்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்க வாய்ப்பு இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. வாஜ்பாயின் 90-வது பிறந்தநாள் வருகிற 25-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், நல்லாட்சி தினமாகவும் மத்திய அரசால் கொண்டாடப்படுகிறது.
வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் அறிவிப்பை அவரது பிறந்தநாளன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.