ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளிய ரயில்வே போலீஸ் - வாள்சண்டை வீரர் பரிதாப பலி!
மதுரா: உத்தரபிரதேசம் மாநிலத்தில் 200 ரூபாய்க்காக ரயிலில் இருந்து ரயில்வே போலீஸ் ஒருவரால் வெளியே தள்ளப்பட்ட தேசிய அளவிலான வாள்சண்டை வீரர் ஹோசியார் சிங் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் மதுராவில் இச்சம்பவம் நடைபெற்று உள்ளது. தேசிய அளவிலான வாள்சண்டை வீரர் ஹோசியார் சிங் தனது அம்மா, மனைவி மற்றும் குழந்தையுடன் மதுராவிற்கு திரும்பியபோது ரயில்வே போலீசாரால் பயணிகள் ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டு உள்ளார்.
ரயிலில் பெண்கள் பெட்டியில் அவரது மனைவி பயணித்து உள்ளார், அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்த காரணத்தினால் அவரை பார்ப்பதற்காக பெண்கள் பெட்டிக்கு சென்றுள்ளார் ஹோசியார் சிங். அப்போது ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் அவரிடம் அபராதம் கட்டவேண்டும், இல்லையென்றால் ரயிலை விட்டு கீழே இறங்குங்கள் என்று கூறியுள்ளார்.
இதன் காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து ஹோசியார் சிங்கை அந்த ரயில்வே போலீஸ் வெளியே தள்ளி உள்ளார். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த ஹோசியார் சிங், சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக அவருடைய மனைவி ஜோதிசிங் கூறுகையில், "என்னுடைய கணவர் என்னை பார்ப்பதற்காக ரயிலில் பெண்கள் பெட்டிக்கு வந்தார். அப்போது அந்த ரயில்வே போலீஸ் அதிகாரியும் வந்தார். என்னை என்னுடைய கணவரிடம் பேச அனுமதி அளியுங்கள் என்று நான் அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர்கள் அனுமதிக்கவில்லை. சொல்லச் சொல்லக் கேட்காமல் என்னுடைய கணவரை வெளியே தள்ளிவிட்டனர்.
இதனால் காயம் அடைந்த அவர் உயிரிழந்து விட்டார். இச்சம்பவத்தில் என்னுடைய கணவரின் உயிர் போவதற்கு காரணமான குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்" என்று கூறிஉள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில்வே போலீசாரின் அஜாக்ரதையால் ஒரு வாள்சண்டை வீரர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டில் தேசிய அளவிலான வாள்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டில் அருணிமா சிங் என்கின்ற வாலிபால் வீராங்கனை ஓடும் ரயிலிலிருந்து ரயில்வே போலீசாரால் வெளியே வீசப்பட்டு தன்னுடைய ஒரு காலை இழந்தார் என்பதும் இங்கே நினைவு கூறத்தக்கது.