மராத்தான் வீரர்கள் பஸ்ஸில் ஏறி வந்து 'ஐ பர்ஸ்ட்' என்று கூறியதால் கலாட்டா!
பெங்களூர்: பெங்களூரில் நடந்த மராத்தான் போட்டியில் கலந்து கொண்ட 3 வீரர்கள் பஸ்சில் ஏறி வந்து போட்டியை முடித்ததால் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.
இந்த மூன்று பேரும் முன்னணியில் வந்து கொண்டிருந்தவர்கள் ஆவார். உண்மையில் இவர்கள் மூன்று பேரும் 16 கிலோமீட்டர் மார்க்கை அடைந்தபோது சரியான திசையில் செல்லாமல் வேறு பாதையில் திரும்பி கூடுதலாக 4 கிலோமீட்டர் தூரம் ஓடி விட்டனர்.
ஆனால் போட்டியாளர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி திருப்பி விட்டனர். இதனால் டென்ஷன் ஆன இவர்கள் மூன்று பேரும் பஸ்ஸைப் பிடித்து போட்டி முடியும் இடத்திற்கு விரைந்தனர்.
விட்ட தூரத்தை கண்டிப்பாக பிடிக்க முடியாது என்பதால்தான் இந்த மூன்று பேரும் பஸ்ஸில் ஏறி போட்டி முடியும் இடத்தை அடைந்துள்ளனர்.
இதில் காமெடி என்னவென்றால் பஸ்ஸில் டிக்கெட் எடுப்பதற்காக, போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களிடம் கடன் வாங்கி காசைத் திரட்டி பஸ்ஸைப் பிடித்து ஓடியுள்ளனர் இந்த மூன்று வீரர்களும்.
அந்த மூன்று வீரர்களில் ஒருவரான இந்தர்ஜித் படேல் கூறுகையில் ஒரு திருப்பத்தில் நாங்கள் யூ டர்ன் எடுக்க வேண்டும். ஆனால் அதை சரியாக மார்க் செய்யவில்லை. சொல்வதற்கும் ஆள் இல்லை. எனவேதான் நாங்கள் கூடுதலான தூரத்தை ஓட வேண்டியதாகி விட்டது என்றார்.
மொத்தம் 42.19 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்டது இந்த மராத்தான் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.