சிசிடிவி கேமராவோடு ஏ.டி.எம். எந்திரம் அபேஸ்
டெல்லி: மேற்கு டெல்லியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இருந்த பண எந்திரத்தை திருடர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
மேற்கு டெல்லியில் உள்ள நரேலா பகுதியில் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் ஏ.டி.எம். மையம் உள்ளது. அந்த மையத்தில் காவலாளி இல்லை. ஆனால் சிசிடிவி கேமரா உண்டு. இந்நிலையில் இன்று காலை துப்புரவு தொழிலாளி ஒருவர் மையத்தில் ஏ.டி.எம். எந்திரம் மாயமானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது எந்திரத்தோடு அங்கிருந்த சிசிடிவி கேமராவும் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும் திருடர்கள் முதலில் தெரு விளக்கை உடைத்துவிட்டு மையத்திற்குள் நுழைந்து ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளையடித்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இத்தனை நாட்களாக காவலாளி இல்லா ஏ.டி.எம். மையங்களில் திருட்டு நடந்தால் சிசிடிவி கேமராவில் பதிவானவற்றை வைத்து போலீசார் திருடர்களை பிடித்தனர். ஆனால் இம்முறை திருடர்கள் சிசிடிவி கேமராவையே திருடிவிட்டு சென்றுள்ளனர்.
திருடர்களின் இந்த தெளிவான திருட்டு அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.